Saturday 9 February 2013

நிறைந்த காதல்.
















" எவ்வளவு   நேரம்  உனக்காகக்    காத்திருக்கிறது? " 

"சீக்கிரம்   தான்    கிளம்பினேன்.      டிராபிக்கினால்   தான்   லேட்டாகிவிட்டது."

இந்த   உரையாடலைக்   கேட்டதும்    'பார்க்'கில்     நடைப்   பயிற்சி    செய்து    கொண்டிருந்த     நான்   சட்டெனத்    திரும்பிப்     பார்த்தேன்.

கண்களில்     தீப்பொறி     பறக்க,    துப்பட்டாவை   சரி  செய்து  கொண்டே ,   அந்தப்   பெண்   தன்னை   நோக்கி     வந்து    கொண்டிருந்தவனிடம் வார்த்தைகளை          வீசினாள்.  " உன்  மொபைல்  என்ன  ஆச்சு?  sms  ஆவது  செய்தாயா? "அந்தப்    பையனை   பார்க்கவே    பரிதாபமாக    இருந்தது.    லேட்டாக    வந்த    ஸ்கூல்    பையனைப்   போலவே  திரு  திரு   முழியுடன்......... 

இது        மாதிரி        நிறைய,  அவ்வப்பொழுது   பார்க்கில்   கண்டு  ரசிக்கலாம்.   

இந்த     காதலர்கள்  இடையில் ,      அன்னப்பறவையாய் ,   மாட்டிக்   கொண்டு   பாடாய்   படுவது     கைக்கடக்கமான     மொபைல்கள்    தான்.  

என்னதான்     பேசுவார்களோ  தெரியாது? பேசி  கொண்டே...........................இருப்பார்கள்.   

ஆனால்  ஒவ்வொரு    ஜோடியைப்   பார்க்கும்  போதும்    இவர்கள்    காதல்    திருமணத்தில்     முடிய    வேண்டுமே   என்று    நான்  வேண்டிக்  
கொள்வேன்  .

என்னோடு    நடக்கும்    தோழி     சொன்னாள்.

"  உன்    வேண்டுதலை    அத்துடன்     நிறுத்திக்    கொள்ளாதே.  அந்தத்       தம்பதியர்     மணமுறிவில்லாமல்       நீண்ட   நாள்   சேர்ந்தே    இருக்க    வேண்டும்     என்றும்    வேண்டுதலை   நீட்டிக்   கொள்."

உண்மை   தான்.    இப்பொழுதெல்லாம்    பெரும் பாலான   காதல்  ,  திருமணத்தில்   தான்    முடிகிது.

ஆனால்  திருமத்திற்குப்   பின்.....................................

காதலிக்கும்   போது     நிறைகள்    மட்டுமே  தெரியும்   துணைக்கு,    திருமணத்திற்கு    பிறகு    குறைகள்   மட்டுமே    பூதாகரமாகத்   தெரிகிறது.

நான்  சொலவதில்  உண்மை  இல்லை  என்றால்,   குடும்ப  நல  நீதி மன்றங்கள்  என்றைக்கோ   மூடு  விழா   கண்டிருக்கும்.

சின்ன  சின்ன   விஷயங்களிற்கு   கூட  , விட்டுக்   கொடுப்பது   குறைந்து  கொண்டே  வருகிறது.

எல்லா     காதலர்களையும்  ,  தம்பதிகளையும்   இந்த   லிஸ்டில்   சேர்க்க  முடியாது.  சிலர்   தான்  இப்படி......   கோர்ட்   படி  ஏறுகிறார்கள்.  

இந்த  சமயத்தில்   ' O Henry '   ன்  கதை  ஒன்று   நினைவிற்கு  வருகிறது.
நிறைய  பேருக்கு  இது  தெரிந்திருக்கலாம்.

அதன்   தமிழாக்கம்   இதோ.........

வறுமையில்     வாடும்    கணவன்   மனைவி  .ஒருவருக்கு  ஒருவர்   கொடுத்துக்     கொள்வதற்கு     அன்பைத்     தவிர     வேறெதுவும்  பெரிதாக  எதுவும்     இல்லை.

மனைவி     தன்     நீண்ட   அழகிய      கூந்தலை    சீவி  முடித்து  கொண்டையிடும்போது    ஒரு       " ப்ரூச் "    இருந்தால்    அழகாக   இருக்குமே  என்று  நினைக்கிறாள்  .    அவள்  நினைப்பது    அவள்  கணவனுக்குத்  தெரியும்  .
ஆனால்  என்ன   செய்வது?.........................................

சரி   .    கிறிஸ்துமஸ்   பரிசாகவாவது    குடுக்க   முயல்வோம்  என்று    நினைக்கிறான்.

கிறிஸ்துமஸ்    வருகிறது...........
 மனைவிக்கு    அவள்    கணவனிடம்    இருக்கும்  பாரம்பர்யமான   வாட்ச்   பற்றித்  தெரியும்.       அதற்கு    தங்க  ஸ்ட்ராப்   வாங்கி    கொடுக்க    நினைக்கிறாள்.  கிளம்புகிறாள்.

கணவனோ     இவள்   கூந்தலிற்கு  ' ப்ரூச்  '   வாங்கக்   கிளம்புகிறான்.

இருவரும்    பணத்திற்காக    அலையோ     அலை   என்று    அலைகிறார்கள்.
கிடைக்கவில்லை.

மாலை  இருவரும்   வீடு   திரும்புகிறார்கள்.   மனைவி    வாட்ச்   ஸ்ட்ராப்புடனும்,   கணவன்   'ப்ரூச்'சுடன் .

வீடு   திரும்பிய   இருவருமே     அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.
கணவன்    தன்னுடைய     பாரம்பர்ய     வாட்சை   விற்று     ப்ரூச்   வாங்கியிருக்கிறான்.

மனைவியோ     தன்     கணவருக்காக    அழகிய    நீண்ட   கூந்தலை   ' விக்'  செய்யும்    கடைக்கு    விற்று விட்டு  வாட்ச் ஸ்ட்ராப்  வாங்கி வந்து விடுவாள்.


இருவருக்கும்  புரிகிறது   தாங்கள்    வாங்கி   வந்தது     இனிமேல்    உபயோகப்படாது    என்று   .

 கண்கள்   குளமாகின்றன  .
 காதலோடு   மனைவியை   இழுத்து   அணைத்துக்   கொள்கிறான்.    

அங்கு    வார்த்தைகளே   இல்லாமல்        காதல்    உணரப்பட்டது.

வறுமையின்    உச்சத்திலும்    காதல்    வளமாக  இருக்கிறது   இல்லையா?

 உண்மைக்    காதல் ,  துணையை     அவர்களின்     குறைகளோடு  ஏற்றுக்கொள்ளச்    செய்யும்  என்பதில்  சந்தேகமேயில்லை.

காதலர்கள்    அனைவரும்   படிக்க  வேண்டிய  கதை   தானே  இது.





PAATTI   STORIES    படிக்க    இங்கே 'க்ளிக்'  செய்யுங்கள்

29 comments:

  1. சின்ன சின்ன விஷயங்களிற்கு கூட , விட்டுக் கொடுப்பது குறைந்து கொண்டே வருகிறது.//நீங்கள் சொல்வது உண்மைதான் அருமை

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா

      Delete
  2. நல்ல கதை ராஜி.
    காதலிக்கும் போது தெரியாத அல்லது அலட்சியப்படுத்தப் பட்ட பல விஷயங்கள் திருமணத்துக்குப் பின்னால் வெளிச்சத்துக்கு வர, முடிவு மணமுறிவு!
    குறை நிறைகளுடன் துணைவரை/துணைவியை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பல பேரிடம் இல்லை.

    ஓ ஹென்ரியின் கதை அருமை.
    நல்லதொரு பதிவுக்கு வாழ்த்துகள்!

    ஜோடிக் கிளிகள் வெகு அழகு!

    ReplyDelete
    Replies
    1. குறைகளை மிகைப் படுத்தி பார்க்கும் மனப்பாண்மை அதிகமாகிக் கொண்டே வருவது போல் தோன்றுகிறது.
      அது நம் திருமணம் என்பதையே மிகவும் லேசாக எடுத்துக் கொள்வதற்கான அறிகுறியோ?
      நிறைகளோடு குறைகளை ஏற்க வேண்டும். தோன்றியது எழுதிவிட்டேன்.
      இந்த ஜோடி கிளிகளை தேற்றுவதற்கு அரை நாள் எடுத்துக் கொண்டேன்.

      நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  3. //உண்மைக் காதல் , துணையை அவர்களின் குறைகளோடு ஏற்றுக்கொள்ளச் செய்யும் என்பதில் சந்தேகமேயில்லை.//

    மிகச்சரியான கணிப்பு. சொல்லப்பட்ட கதையும் சூப்பர்.

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. வைகோ சார்,

      நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      ராஜி

      Delete
  4. //என்னதான் பேசுவார்களோ தெரியாது?
    பேசிக் கொண்டே...........................இருப்பார்கள். //

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! பேச எவ்ளோ விஷயங்கள் இருக்கும்!! நீங்க வேற ....!

    ReplyDelete
  5. ”நிறைந்த காதல்”. என்ற தலைப்பும் ஜோடிக்கிளிகள் படமும் அழகோ அழகு.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சார். கிளிப் படம் பார்த்து பார்த்து செலக்ட் செய்தது.

      Delete
  6. //காதலிக்கும் போது நிறைகள் மட்டுமே தெரியும் துணைக்கு, திருமணத்திற்கு பிறகு குறைகள் மட்டுமே பூதாகரமாகத் தெரிகிறது.//

    இதைத்தான், காதலுக்குக்கண் இல்லை என்று சொல்லுகிறார்களோ என்னவோ!

    படிக்க மிகவும் சுவைபடத்தான் எழுதியுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மீள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி சார்.

      ராஜி

      Delete
  7. மனம் இரண்டும் ஒன்றுபட்டு விட்டால் பிரிவேது...? நல்ல கதை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தனபாலன் சார்.
      உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  8. ஓ ஹென்ரியின் கதை அருமை இதை முன்பே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கும் போது மனம் சலிக்காமல் இருக்கிறது.
    இந்த பதிவை பிப்ரவரி 14 அன்று வெளியிட்டு இருந்தால் காதலர் தினப்பதிவாக இருந்து இருக்கும். இருந்தபோதிலும் பகிர்வுக்கு நன்றி...


    காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் மட்டும் விவாகரத்து கோரி கோர்ட் படியேறுவதில்லை பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து கொண்டவர்களும் விவாகரத்து கோரி கோர்ட் படியேறுகிறார்கள் இதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாது இருப்பதுதான். எங்கு "தான்" என்ற எண்ணம் மேல் எழும்பும் போது "நாம்" என்ற எண்ணம் கிழே விழுந்து அடிபடுகிறது..

    எங்களது திருமணம்(முஸ்லீம் & பிராமின்) காதல் திருமணம்தான் இன்று வரை எங்கள் குடும்பத்தின் பெரியவர்களின் ஆசிர்வாதத்தால் இன்று வரை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. மதம் மாறாமலேயே இன்று வரை வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. எத்தனை முறை படித்தாலும் "The Gift of Magi " மீண்டும் மீண்டும் படிக்க வைக்கும். அது சொல்லும் காதலே அதற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

      நீங்கள் சொல்வது சரியே. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாதது தான் மணமுறிவுக்கு காரணம்.
      உங்கள் திருமண வாழ்க்கை மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
      பதினாறு வகை செல்வங்க பெற்று பெரு வாழ்வு வாழ ஆசீவதிக்கிறேன்..


      Delete
    2. ஒன்று சொல்ல மறந்து விட்டேன். காதலர் தினத்திற்கு வேறு ஒரு பதிவு வைத்திருக்கிறேன்.

      நன்றி உங்கள் வருகைக்கும், விரிவான கருத்து பரிமாற்றத்திற்கும்.

      Delete
  9. காதலிக்கும் போது நிறைகள் மட்டுமே தெரியும் துணைக்கு, திருமணத்திற்கு பிறகு குறைகள் மட்டுமே பூதாகரமாகத் தெரிகிறது.//

    நிறை, குறைகளை அலசாமல் வாழ்க்கை துணையை அவர்கள் நிறை குறைகளுடன் ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை பயணம் நிறைவை தரும்.
    அதைக் கூறும் அருமையான பதிவு. காலத்துக்கு ஏற்ற கருத்துக்களை அழகாய் சொல்கிறீர்கள் ராஜி. ஓ ஹென்ரியின் கதை அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது மிகச் சரியே.

      வாழ்க்கைப் பயணம் சிறக்க எதையும் ஆராய்ச்சி செய்யாமல் இருக்க வேண்டும். சரியாக சொன்னீர்கள்.

      நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  10. நல்ல கதை தோழி , இந்த அன்பு இருக்க வேண்டும் கண்டிபாக வாழ்கை சுவாரசியம் மிகுந்ததாக இருக்க விருப்பு வெறுப்பு, நிறை குறை பிடித்தது பிடிக்காதது இதற்கு நடுவே மெல்லியதாக சிறு இழை யாக ஓடிகொண்டிருப்பதுதான் காதல், அன்பு,பாசம் இந்த இழை மட்டும் தொலைந்து போகமல் இருக்கும் வரை எல்லாம் இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  11. உண்மைக் காதல் , துணையை அவர்களின் குறைகளோடு ஏற்றுக்கொள்ளச் செய்யும் என்பதில் சந்தேகமேயில்லை.

    நிறைந்த காதல்.அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய நிறைந்த காதலைப் பாராட்டிய உங்களுக்கு நன்றி.

      Delete

  12. சில விஷயங்கள் பல முறை சொன்னாலும் போதவில்லை. காதல் என்பது உள்ளத்தின் வெளிப்பாடு. திருமணத்துக்குப் பிறகு ப்பூ இதுதானா என்ற எண்ணம் வெளிப்பட்டு ஒருவருக்கு ஒருவர் புரிதல் இல்லாமலேயே வாழ்க்கை முடிந்து விடுகிறது. நானும் ‘ காதல் என் கோணத்தில் என்று எழுதி இருக்கிறேன். திருமணங்கள் பற்றியும் எழுதி இருக்கிறேன். திருமணத்தில் ஒருவரை ஒருவர் அவரவரது நிறை குறைகளுடன் ஏற்றுக் கொள்ளப் பழக வேண்டும் . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார் ,
      உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.
      உங்கள் பதிவை (காதல் என் கோணத்திலே ) படித்துப் பார்க்கிறேன்.

      Delete
  13. இன்றைய நவநாகரீக காதலர்களின் உண்மை நிலை இதுதான்... நல்ல பகிர்வு..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.
      தொடர்ந்து வாருங்கள்.
      நானும் உங்கள் தளத்தைத் தொடர்கிறேன்.

      Delete
  14. காதலர்தின ஸ்பெஷல் நல்லாருக்கு,படமும்கூட.எப்போதும்போல் ஒரு சிறு அறிமுகக்கதையுடன் இன்று ஒரு காதல் கதையும் சேர்ந்துகொண்டதில் படிப்பதற்கு சுவாரஸியமாக இருந்தது.உங்கள் வேண்டுதலுடன்,உங்கள் தோழியின் வேண்டுதலும் நிறைவேறினால் காதலருக்கு மட்டுமல்லாது பெற்றோருக்கும் ஒரு பெரிய நிம்மதி.

    ReplyDelete
    Replies
    1. காதலர் தினத்திற்கு வேறு பதிவு எழுத வேண்டுமென நினைத்திருக்கிறேன்.

      நான் இப்படி ஒரு அறிமுகக் கதையுடன் தான் எழுத ஆரம்பிக்கிறேன் என்று நீங்கள் சொன்னவுடன் தான் யோசித்துப் பார்த்தால்......
      அட! ஆமாம்.... . பெரும்பாலும் அப்படித்தான் எழுதியிருக்கிறேன்....

      நான் எழுதுவதை ரசிப்பதற்கும், பாராட்டுக்கும் இன்னொரு நன்றி.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்