Monday 16 March 2015

அப்பாவிற்குக் கிடைத்த தண்டனை !

இந்தக் கதையை நான் எழுதி ஒரு வருடத்திற்கு மேல் ஆகியிருக்கும். இதை வெளியிடாமல்  தூங்கினாயா என்று கேட்காதீர்கள் . இந்தக் கதையைப் போட்டி ஒன்றிற்கு அனுப்பியிருந்தேன். கதைத்  தேர்வாகவில்லை.
அதனால் என்ன  ? நாமே வெளியிட்டு விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது sirukathaigal.com தளத்தைப் பற்றித்  தெரிய வந்தது.அவர்களுக்கு அனுப்பி வைத்ததில் அவர்கள் தளத்தில் என் கதையை குடும்பக் கதை என்கிறப் பிரிவில்   வெளியிட்டுள்ளார்கள் .
sirukathaigal.com தளத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நீங்களும் படித்து உங்கள் கருத்தை சொன்னால் மகிழ்வேன்.
இதோ

அப்பாவிற்குக் கிடைத்த தண்டனை   


  
google image


மைதிலி  கோலத்தைப்போட்டு விட்டுத் திரும்பினாள் . மைதிலியின் வயது என்னவோ ஐம்பது தான்.. ஆனாலும் வாழ்க்கையின் பாடங்கள் அவளுடைய வயதை அறுபதைத் தாண்டி சொல்லத் தோன்றியது.

கோலத்தின் அழகைப் பார்த்ததும்  தன்னைப் பிரிந்த  கணவனின் நினைவு ,மைதிலியை  அழுத்தியது.அவனுக்கு இவள் கோலத்தையும் பிடிக்கும், இவள் கோலம் போடும் அழகும் படிக்கும். மைதிலிக்குத் திருமணம் ஆன போது அவளுக்கு வயது பத்தொன்பதைத் தாண்டவில்லை. இயற்கை அவளுக்கு அழகை வாரி வழங்கியிருந்தது. எழுதி வைத்தாற்  போலிருந்த கண்ணும், ஒற்றைக்கல் ஜொலிக்கும் மூக்குத்தியும்  அவள்  அழகை இன்னும் கூட்டிக் காட்டின. கணவன்  ராமனுக்கு, அவன் மனைவி மேல் தாங்கொணாக் காதல், மற்றும் பெருமை என்றே சொல்ல வேண்டும். ராமன் மிகப் பெரிய வேலையில் இல்லை என்றாலும், கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தான். அந்தச் சம்பளத்தில் சிக்கனமாய் குடித்தனம் செய்து கொண்டிருந்தாள்  மைதிலி. மைதிலியின் மாமியாரும் கூடவே தான் இருந்தாள். மைதிலியின் அழகு  அவள் கண்ணை உறுத்தினாலும், தான் பார்த்து வைத்த பெண்  என்பதால்  சகித்துக் கொண்டாள். ராமனுக்கு  ஒரு தங்கை . அவளுக்கு ஏற்கனவே திருமணமாகி அதே ஊரில் வசித்து வந்தாள் . அவளுக்கு தன அண்ணியின் அழகும் , கைவேலை நேர்த்தியும் , கண்ணை உறுத்தி அவளைப் பொறாமைத் தீயில் தள்ளியது.

சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் , " அழகாக இருந்தாலே ஆபத்து தான் " என்று சொல்லிக் கொண்டேயிருப்பாள். அவள் தன்னைத் தான் சொல்கிறாள் என்று மைதிலிக்குப் புரிந்தாலும்  , சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவாள் மைதிலி. அழகில் மட்டுமல்ல வாய் பாட்டிலும்  வித்தகி மைதிலி. " தாரமர் கொன்றையும் " என்று அபிராமி அந்தாதி பாட ஆரம்பித்தாளானால்,  வீடே  அந்த சங்கீதத்தில் லயித்து விடும். மைதிலி மேல் ராமன் பெருமை கொள்வதில்  ஒன்றும் அதிசயமில்லை.அவ்வப்பொழுது அவளை இழுத்து அணைத்துக் கொள்வதிலும், சட்டென்று சமயலறைக்கு வந்து யாருக்கும் தெரியாமல் அவள் கன்னத்தில் இதழ் பதிப்பதுமாக  இருப்பான். நாணத்தினால் மைதிலி  முகம் சிவந்து  அவள் அழகைப்  பல மடங்குக் கூட்டும்.

அன்று, காலை எழுந்ததிலிருந்து  தலை  சுற்றுவது போலிருந்தது. கோலம்போட்டு விட்டு உள்ளே நுழையும் போது அப்படியே  வாசற்கதவில் தலையை   சாய்த்துக் கொண்டு கீழே அமர்ந்து விட்டாள் . உடனே அவளை  டாக்டரிடம் அழைத்து சென்றதில்  அவள்  தாயாகப் போகிறாள் என்கிற மகிழ்ச்சி செய்தி கிடைத்தது.  ஆனால்.....அதற்குப் பிறகு நடந்தவை எல்லாமே  கசப்பான நிகழ்வுகள்  தான். இந்த  அன்யோன்யமானத்  தம்பதிகள் மேல் யார் கண் பட்டதோ?

மைதிலி வாந்தியும், மயக்குமுமாய் இருந்த நாளில், ஒரு நாள் ராமன் ஆபீசிற்கு சென்று விட்டான். அவள் மாமியாரோ  கோவிலுக்கு.இவள் அப்பாடா என்று சற்றே கண்ணை  மூடிப்   படுத்திருந்தாள் .

" டிங் டாங் " காலிங் பெல் அடித்தது.

மெதுவாக மைதிலி நடந்து  போய் கதவைத் திறந்தாள். வெளியே நின்றிருந்தது  அவள் நாத்தனார், ஜெயாவின்  கணவன்  விஜய் .

" வாங்க " என்று கூப்பிட்டு விட்டு உள்ளே சென்றாள் . தலை  " கிறு  கிறு "  என்று சுற்றியது. தள்ளாடியபடியே சேரை இழுத்துப் போட்டு,  அவரை   உட்காரச் சொன்னாள் . விஜய்  கதவைத் தாளிட்டுக் கொண்டிருந்தான். மைதிலி  " சாத்த வேண்டாங்க.  அத்தை கோவிலுக்குப் போயிருக்கிறார்கள். இதோ வந்து விடுவார்கள் " என்று சொல்ல , அதற்கு விஜய் ," எனக்குத் தெரியும். அத்தை  அங்கே என் வீட்டில் தான் இருக்கிறார்கள்.அவர்களை அங்கேயே இருக்க சொல்லி விட்டுத் தான் வந்தேன் .ஜெயாவிற்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. அவர்கள் அங்கு தான்  இருப்பார்கள். " என்று சொல்லி விட்டு," " உன் துணைக்கு நான் ".......என்று சொல்லும் போது தான் விஜய் இங்கு வந்தது, வேறு நோக்கத்தில்  இருக்குமோ  என்கிற சந்தேகம் தோன்றியது மைதிலிக்கு. அரண்டு போய்  விட்டாள்  மைதிலி. எதை சாக்கு வைத்தாவது, வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று நினைத்து  , " காபிப் போட  பால் இல்லை. பக்கத்து வீட்டிலிருந்து பால் வாங்க வேண்டும், கொஞ்சம் நகருங்கள் " என்று சொல்ல, விஜய் அவள் கையை அழுத்தமாகப் பிடித்து," இந்த சந்தர்ப்பத்திற்காக  எவ்வளவு நாட்கள் காத்திருப்பேன், இப்பொழுது பாலும், காபியும் முக்கியமா? வா... உன் கணவன் வர எப்படியும் மாலை ஆகும் " என்று சொன்னவுடன் மைதிலி, தான் நன்றாக அவனிடம் அகப்பட்டுக் கொண்டது புரிந்தது.

பக்கத்து வீட்டிலிருப்பவர்களை கத்தி அழைக்கலாம் என்று நினைத்தால்,
 " கூப்பாடுப் போட்டுத்  தகராறு செய்தால், நீ தான் என்னை இங்கே  வரச் சொன்னாய் " என்று உன் மேலேயே பழி போடுவேன் என்று சொல்ல  மைதிலி செய்வதறியாது திகைக்க,  விஜய் அவளை நோக்கி நகர்ந்தான்.

மைதிலி சட்டென்று கையை உதறி விட்டுச்  சமையலறை நோக்கி ஓட , விஜய்  பின்னாடியே சிரித்துக் கொண்டே வர, அவள் கையில் கிடைத்தக் காய்கறிக் கத்தியால்  அவனைக் குத்துவது போல்  கையைக் கொண்டு போகவும், மீண்டும் அழைப்பு மணியின் சத்தம். மைதிலிக்கு  அது அழைப்பு மணியாக ஒலிக்கவில்லை.கோவில் மணியாகவே இருந்தது  . விஜய்யும் சட்டென்று சுதாரித்துக் கொண்டு கதவைத் திறக்கவும், வெளியே அவள் மாமியாரும், ஜெயாவும், நின்றிருக்க  , மைதிலி ஓவென்று   மாமியாரைப் பார்த்து அழுது கொண்டே சொல்ல ஆரம்பிக்கவும் , விஜய் முந்திக் கொண்டான்.

" உங்களை  எல்லாம்  பார்த்ததும் அழுது புலம்புகிறாள் . இவள் தான்  என்னை யாரும் இல்லாத சமயத்தில் வரச் சொன்னாள்  " என்று பழி சொல்ல , அப்புறம் என்ன நடந்திருக்கும் என்று  உங்களால் யூகிக்க முடியும்.  ராமன் அவசரமாக ஆபிசிலிருந்து வரவழைக்கப் பட , மைதிலிக்கு  எதையும்  சொல்ல சந்தர்ப்பம் அளிக்காமல் , வேசி என்று தீர்மானித்து , ராமனைக்  கொண்டே மைதிலியை அவள் அண்ணன் ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டாள் .கணவன்  ராமன்  தன்னை சந்தேகப்படுவது தான் மைதிலியை மிகவும்  பாதித்தது.

அதற்குப் பிறகு மைதிலி, அவள் அண்ணன் வீட்டில் வேண்டாத விருந்தாளியானாள் . அக்ஷயா பிறந்தாள் .அக்ஷயாவிற்கு ஒரு வயது வரை பல்லைக் கடித்துக் கொண்டு  காலம் தள்ளிய   மைதிலி  தனக்கு அப்பா, அம்மா இல்லாத சங்கடத்தை பூரணமாக உணர்ந்தாள் .  சமையல் வேலைக்கு வக்கீல் வீட்டில் ஆள் வேண்டும் என்று கேட்கவும், அங்கே அக்ஷயாவுடன் சென்று விட்டாள் . அண்ணனிடம் தன் முடிவைப் பற்றி சொல்லிவிட்டுத்  தான் கிளம்பினாள் . அதிகம்  மறுப்புத் தெரிவிக்கவில்லை அவள் அண்ணன்.

" திக்கற்றவருக்குத் தெய்வமே துணை  ". அந்தத் தெய்வமே  வக்கீலின் மனைவி ரூபத்தில்  இருந்தது அவள் செய்த புண்ணியமே. அதுவும் அவர்களுக்கு குழந்தையில்லாதக் குறையை  அக்ஷயா  தீர்த்து வைக்க  இருவரையும் அவர்கள் வீட்டு  அவுட் ஹவுஸில்  தங்க வைத்துக் கொண்டார்கள். அக்ஷயா படிப்பு,  உடை என்று சகலமும்   வக்கீல் வீட்டு மாமி  உபயத்தில்  சிரமமில்லாத வகையில் முடிந்தது.ஆனால் அவ்வப்பொழுது " அப்பா எங்கே " என்கிற அக்ஷயாவின்  கேள்விக்கு மட்டும் மைதிலியால் விடையளிக்க முடியவில்லை.அப்பாவின் பாசத்திற்கு மிகவும் ஏங்கித் தான் போனாள்அக்ஷயா.பள்ளியில் பெற்றோர் தினம், பிறந்த நாள்  என்று அவள் அப்பாவை  நினைவு கொள்ளாத  நாளேயில்லை எனலாம்.   அவ்வப்போது அவள் அண்ணன் அவளை வந்து பார்த்துப்  போகவும், மைதிலி வாழ்நாள் கரைந்து கொண்டிருந்தது. ராமனின் நினைவு  வராமல் இருக்குமா என்ன?  சில  சமயம் அவள் அண்ணனிடம் அதைப் பற்றிக் கேட்கவும் செய்தாள் .ஆனால் ராமன் இவளை சுத்தமாக  மறந்தே விட்டான் போலும்.


சிறிது நாள் கழித்து , அவனுக்கு வேறு திருமணம் ஆன செய்தியும் கிடைத்தது. அவள் அண்ணனோ , "  வக்கீல்   நோட்டீஸ் அனுப்பலாமா? . அதெப்படி முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது திருமணமா? "என்று குதிக்க , மைதிலி  தான் இனிமேல் அவனுடன் வாழப்போவதில்லை என்று சொல்லி அவனை  அடக்கி விட்டாள் .

வருடங்கள் பல ஓடி மறந்தன....

சரியான வயது வந்தவுடன் அக்ஷயா தன் அப்பா யாரென்றும், தங்களுக்கு இந்த நிலைமை ஏன்  என்றும் ஒருவாறு புரிந்து கொண்டாள். 


இப்போது ,அக்ஷயா  அழகிய இளம் பெண்ணாக, அம்மாவின் அழகையெல்லாம்  பிரதி எடுத்தாற்  போலிருந்தாள் . பொறியியல் படிப்புப் படித்துக் கொண்டே  வக்கீலுக்கு கணினியில்  உதவி செய்வாள் . அப்படி  அவள் கணினியில்  உதவும் போது,  வக்கீலின்  நண்பர் கண்ணில் பட, அவருடைய மகனிற்கு , அமெரிக்காவில் இருப்பவனுக்கு திருமணம் செய்து கொள்ள அக்ஷயாவும்  அமெரிக்கா  சென்றாள்.நல்ல குடும்பத்தில் அவள் வாழ்க்கைப் பட்டத் திருப்தியில்   , மைதிலி நிம்மதியாக வக்கீல்  வீட்டில் தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள் . அவ்வப்பொழுது போனில் மகளின் குரல் வயிற்றில் பால் வார்க்கும்.

இப்பொழுது ஒரு மாதமாக முதுகு வலி, இடுப்பு வலியெல்லாம் தனக்கு வயதாவதை மைதிலிக்கு தெரியபடுத்துகிறது. அன்று எல்லா வேலையையும் முடித்து விட்டு, டிவியில் தனக்குப்ப் பிடித்த சீரியலைப் பார்க்க உட்காரும் போது, வாசலில் நிழலாடியது. யாரென்று பார்க்கப் போனாள் . தாடியும், மீசையுமாய், ஒட்டிய வயிறுமாய்,  ராமன் நின்றிருந்தான். மைதிலிக்கு, என்ன செய்வது, சொல்வது என்று புரியாமல்...திகைத்து நிற்க , மைதிலி ... என்று அவன் சொன்னவுடன் உருகித் தான்  விட்டாள்  மைதிலி. கண்களில் கண்ணீர்  ஆறாய்  பெருக அவனை உள்ளே உட்காரச்  சொல்லி, அவனுக்குக் காபி போட்டுக் கொடுத்து , விசாரிக்க ஆரம்பித்தாள்.

மைதிலியைத் துரத்திவிட்டு வேறு திருமணம் செய்து கொண்டதற்கு  நல்ல தண்டனை தனக்குக் கிடைத்து விட்டது என்றும், வந்தவளுடைய  நடத்தை சரியில்லாததால் , அவள் வேறு யாருடனோ சென்று விட்டதாகவும், அதற்குப் பிறகு தனக்கு, வாழ்க்கையில்  பிடிப்பு இல்லாமல் போகவும், வேலை  போய்,அவன் அம்மாவும் இறக்க இவன் அனாதையாயிருக்கிறான். 

மைதிலியின் இருப்பிடத்தை எப்படியோ தேடிக் கண்டு பிடித்து வந்து விட்டான். அவனுக்கு வயிறார சாப்பாடு போட்டு, பேனைப் போட்டு  தூங்கச் சொல்லி விட்டு  வக்கீல் வீட்டிற்கு சென்று விவரம் தெரிவிக்க சென்றாள் மைதிலி.


வக்கீலின்  மனைவி  அதற்குள் வந்து," மைதிலி, உனக்கு ஒரு நல்ல செய்தி. நீ அமெரிக்கா செல்ல விசா வந்து விட்டது. அக்ஷயா  அடுத்த  மாதத்திற்கு டிக்கெட் வாங்குவதாக சொல்லி  விட்டாள் . " என்று சொன்னதும், இவள் ராமனைப் பற்றிய விவரங்கள் சொல்லவும், அக்ஷ்யாவிற்கு உடனடியாகத் தெரிவிக்கப் பட்டது.

அக்ஷயா உடனே அவள் அம்மாவுடன் போனில் பேசி விவரம் அறிந்து கொண்டாள். " நீ தாய்மை அடைந்திருப்பதை கூட பொருட்படுத்தாமல்  உன்னை வெளியே அனுப்பியவரை என் அப்பா என்று சொல்லவே எனக்குப் பிடிக்கவில்லை..இவருக்காக நீ அமெரிக்கா வர மாட்டேன் என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் டிக்கெட் வாங்கி அனுப்புவது உறுதி. நீ வந்து தான் தீர வேண்டும் " என்று முரண்டு பிடிக்க. , மைதிலி ராமனைப் பார்த்தாள் .

அவனோ அலமாரியில் இருந்த அக்ஷயா திருமண போட்டோவைப் பார்த்துக் கொண்டிருந்தான். போனில் மைதிலி பேசிக் கொண்டிருந்ததையும் பார்த்தான். மகளுடன் பேச அவன் நினைத்தாலும் , அவள் அப்பா என்று ஏற்றுக் கொள்வாளா?இத்தனை நாட்கள் இவர்களைத் தவிக்க விட்டுவிட்டு  இப்பொழுது அவர்களுடன் வாழ்க்கையைக் கொண்டாட, அவன் மனது இடம் கொடுக்கவில்லை.என்ன  செய்வது? யோசித்தான்.

அன்றிரவு, சாப்பிட்டு முடித்தவுடன், மைதிலி உறங்கி விட்டாள்  என்று தெரிந்து கொண்டு  ஒரு பேப்பரை எடுத்து, " உன்னிடம்  நான் மன்னிப்பு கேட்கவே வந்தேன்,. இனி உன் வாழ்க்கையில் எந்த  சங்கடமும் என்னால் வர வேண்டாம்  ,அதனால் நான் முதியோர் இல்லம் ஒன்றிற்குப் போகிறேன்.  என்னைப் பார்க்க நினைத்தால் அங்கு வந்து பார்க்கலாம். உன் மகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்துக் கொண்டே என் மீதி நாட்களைக் கழிக்கப் போகிறேன். அது தான் நீ என்னை மன்னித்ததற்கு அடையாளம் என்று சொல்லி  கடித்தத்தை முடித்திருந்தான். " அவள் முகம் திருத்தும் கன்னாடிக்கும் சுவற்றிற்கும் நடுவில் செருகி ,வைத்து விட்டு  போய் விட்டான்.

காலை எழுந்ததும், மைதிலியின் கண்ணில் இந்தக் கடிதம் தென்பட்டது. படிக்க, படிக்க  கண்ணீர் தரை தாரையாக  வழிந்துக் கொண்டிருந்தது. கண்ணைத் துடைத்து விட்டுக் கொண்டேயிருந்தாள் . போன் மணியடித்து அவள் கவனத்தைத் திருப்பியது. போனில் அக்ஷயா," என்ன டிக்கெட் வாங்கிடலாமா ?"
என்று கேட்க, இவள் நடந்ததை சொன்னாள் . " அம்மா கவலைப் படாதே,நானும் ,அங்கு வரும் போது இருவருமாக அவரைப் போய் பார்க்கலாம்." என்று சொன்னாள் . அப்பா என்று சொல்வதை அவள் தவிர்த்தது மைதிலிக்குப் புரிந்தது. அக்ஷயா , அப்பா இல்லாததால்  பட்ட சிறு வயது அவமானங்கள் ,சங்கடங்கள் எல்லாம் தான் , அப்பா என்கிற வார்த்தையையே   அவள் வெறுக்கக் காரணம்,என்று மைதிலிக்குத் தெரியும்.   இந்தளவாவது இங்கு வரும் போது அவரைப் பார்க்கலாம் என்று சொல்கிறாளே என்று  சமாதானப் பட்டுக் கொண்டாள்.  

ஆனால் அக்ஷயா  அவள் அப்பாவை இந்தியா வரும் போது பார்ப்பாளா?

அக்ஷயா "அப்பா அப்பா "என்று ஏங்கும் போது ,அக்ஷயா எட்டி பிடிக்க  முடியாதத் தூரத்திலிருந்தான் ராமன். இப்போது அக்ஷயா,  ராமனின் கைக்கு எட்டும் தூரத்தில் தான் இருக்கிறாள். ஆனாலும் அவளிடம் பேசக் கூட முடியாத நிலைமை அவனுக்கு.  

ஒரு அப்பாவிற்கு  இதை விடப் பெரிய தண்டனை இருக்க முடியுமா?

37 comments:

  1. வாழ்த்துகளோடு தமிழ் மணம் 1 கருத்துரை நாளை தருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி கில்லர்ஜி

      Delete
  2. வணக்கம்

    பிரிவு என்பது தாங்கமுடியாத வலிதான்.. தொடக்கிய விதமும் முடித்த விதமும் நன்று
    த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது போல் பிரிவு தாங்க முடியாத வலி தான் . ஆனால் அதிலிருந்து மீள அக்ஷயா பேருதவியாக இருந்திருக்கிறாள் . இது தான் கடவுளின் கருணைப் போலும்.
      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும், தமிழ் மண வாக்கிற்கும் நன்றி ரூபன்.

      Delete
  3. நல்ல கதை. சில நியாயங்கள் இந்தப் பிறவியிலேயே தீர்க்கப்பட்டு விடுகின்றன. சில அடுத்த ஜென்மத்திற்குக் காத்திருக்க வேண்டியதாகிறது!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதுப் போல் பல நியாயங்கள் பெரும்பாலும் இப்பிறவியிலேயே தீர்க்கப்பட்டு விடுகின்றன. நிஜ வாழ்க்கையிலும் அதை கண் கூடாக பார்க்க நேரிடுகிறது. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  4. சந்தேகப்பிராணிக்கு தண்டனை சரி தான்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்.

      Delete
  5. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    இதுபோன்ற மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துகளுக்கும் , தமிழ் மண வாக்கிற்கும் நன்றி சார்.

      Delete
  6. நல்லதொரு கதை!..

    கர்ப்பிணியான மனைவியை நிராதரவாக நிறுத்தியவன் - அப்பா எனும் பெயருக்கு உரிமை கொண்டாட முடியாது.. அவன் வினையை அவன் அனுபவித்தே தீர வேண்டும்!..

    சில கணக்குகளைத் தீர்க்கத் தான் வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும் நன்றி துரை சார்.

      Delete
  7. நான் கூட மைதிலி ராமனை மன்னித்து,பழைய கதைகள் போல முடிவு இருக்கும் என்று நினைத்தேன் .
    அழகாக வடிவமைத்திருக்கிறீர்கள்.மனம் நிறைந்த வாழ்த்துகள் ராஜிசிவம்.

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய கதையைப் படித்து ரசித்து என் மாறுபட்ட முடிவைப் பாராட்டுவதற்கு நன்றி ரேவதி மேடம்.

      Delete
  8. நன்றாக இருக்கிறது. ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து வந்தவனை மைதிலி ஏற்றுக் கொண்டது தான் சரியாய்த் தெரியவில்லை. நல்லவேளையாக ராமன் புரிந்து கொண்டு தனியாய்ப் போனான். கட்டின மனைவி மேல் சந்தேகப்படுபவன் எல்லாம் என்ன கணவன்? அவள் நாத்தனாருக்குத் தான் தெரிய வேண்டாமா? தன் கணவன் குணம் புரிந்து கொள்ளாமலா இருந்திருப்பாள்? மோசமான மனிதர்கள், பெண்ணுக்குப் பெண்ணே எதிரி! :(

    ReplyDelete
    Replies
    1. நிஜ வாழ்க்கையில் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள். கீதா மேடம். மைதிலியின் நாத்தனாருக்கு அவள் கணவன் குணம் தெரியாமலா இருந்திருக்கும்.,தன வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள , ராமன், மைதிலி வாழ்க்கையைக் கெடுத்து விட்டாள்.
      உங்கள் விரிவானக் கருத்துரை என்னை மகிழ்விக்கிறது கீதா மேடம்.
      உங்கள் கருத்துரைக்கும், பாராட்டுக்கும் நன்றி மேடம்.

      Delete
  9. சிறப்பான கதை. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கு நன்றி ஆதி.

      Delete
  10. அருமையான கதை யதார்த்தமான நடை அழகு.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மீள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கில்லர்ஜி.

      Delete
  11. இந்தக்கதையை தாங்கள் வெளியிட்ட அடுத்த நிமிடமே படித்து முடித்து விட்டேன். என்னமோ எனக்கு வழக்கம்போல பின்னூட்டம் தர உற்சாகம் ஏற்படவில்லை.

    இந்தக்கதை என் மனதை மிகவும் பாதித்தது. கையில் ஒரு பெண் குழந்தையுடன், வீண் பழியைச் சுமந்துகொண்டு, வீட்டை விட்டுப் புறப்பட்ட ஓர் அழகான பெண் எவ்வாறெல்லாம் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என நீண்ட நேரம் யோசித்துக்கொண்டே இருந்தேன். மிகவும் வருத்தமாக இருந்தது.

    திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள் மேலே கூறியுள்ள பல கேள்விகள் என் மனதையும் அரித்தது. இதுபோலெல்லாம் ஆங்காங்கே இலைமறை காய்மறையாக உலகில் ஏதாவது ஏடாகூடமாக நடக்கக்கூடும் என்றாலும் .... நாம் எழுதும்போது, இவற்றைப்பற்றியெல்லாம் அதிகமாக பிரஸ்தாபித்துச் சொல்லாமல் .... மகிழ்ச்சி தரும் நல்ல முடிவுகளாகச் சொல்லலாமே என்று எனக்குள் ஓர் எண்ணம் உண்டு. தயவுசெய்து என்னைத் தவறாக ஏதும் நினைக்காதீர்கள்.

    கதை எழுத ஆரம்பித்துள்ளதும், போட்டிகளில் கலந்துகொள்வதும் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. கோபு சார்,
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் , வாழ்த்திற்கும் நன்றி சார்.
      பெண்கள் கணவருடன் சேர்ந்து வாழ்வது ஆனந்தமே. எத்தனை சங்கடங்கள் வந்தாலும் கணவனின் துணையுடன் எதிர் கொள்வாள் தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கணவனின் அருகாமைக் கிடக்கவில்லை என்கிற போதும், தன கடமைகளிலிருந்து அவள் தவறுவதுமில்லை, வாழ்க்கையின் சவால்களை எதிர் கொள்ள அஞ்சுவதுமில்லை என்பதைத் தான் நான் மைதிலி மூலமாக சொல்லியிருக்கிறேன். . அதுப் போல் இக்காலப் பெண்களின் மனோ நிலையை அக்ஷயா படம் பிடித்துக் காட்டி விட்டாள். அக்காலப் பெண்களோ, இக்காலத்தவரோ தன்னம்பிக்கை நிறைந்தவளாக இருக்கிறாள் பெண் என்பதே என் கணிப்பு. அதை இந்தக் கதை பிரதிபலித்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

      ஆனாலும் நீங்கள் சொன்ன கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். இனி கதைகள் எழுதும் போது என் போக்கில் நகைச்சுவைக் கலந்து எழுதி விடுகிறேன்..

      ஒன்றை சொல்லியேயாக வேண்டும். உங்கள் கருத்துரையை என் கதையின் வெற்றியாக எடுத்துக் கொள்கிறேன்.அதற்காக மீண்டும் என் நன்றிகள் பல.

      Delete
    2. //பெண்கள் கணவருடன் சேர்ந்து வாழ்வது ஆனந்தமே. எத்தனை சங்கடங்கள் வந்தாலும் கணவனின் துணையுடன் எதிர் கொள்வாள் தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கணவனின் அருகாமைக் கிடக்கவில்லை என்கிற போதும், தன கடமைகளிலிருந்து அவள் தவறுவதுமில்லை, வாழ்க்கையின் சவால்களை எதிர் கொள்ள அஞ்சுவதுமில்லை என்பதைத் தான் நான் மைதிலி மூலமாக சொல்லியிருக்கிறேன். . அதுப் போல் இக்காலப் பெண்களின் மனோ நிலையை அக்ஷயா படம் பிடித்துக் காட்டி விட்டாள். அக்காலப் பெண்களோ, இக்காலத்தவரோ தன்னம்பிக்கை நிறைந்தவளாக இருக்கிறாள் பெண் என்பதே என் கணிப்பு. அதை இந்தக் கதை பிரதிபலித்திருக்கும் என்றே நினைக்கிறேன். //

      ஆம். இவையெல்லாம் தங்களின் இந்தக்கதையினில் நன்கு பிரதிபலித்துள்ளது என்பதில் எனக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

      >>>>>

      Delete
    3. //ஆனாலும் நீங்கள் சொன்ன கருத்தையும் ஏற்றுக் கொள்கிறேன்.//

      மிக்க நன்றி, மேடம்.

      //இனி கதைகள் எழுதும் போது என் போக்கில் நகைச்சுவைக் கலந்து எழுதி விடுகிறேன்..//

      நகைச்சுவையை ஆனந்தமாக ரஸிப்பதோ, நகைச்சுவையாக பேசுவதோ, நகைச்சுவையாக எழுதுவதோ எல்லோராலும் செய்ய முடியாததோர் அரிய பெரிய செயலாகும். அது இறைவன் நமக்குக் கொடுத்துள்ள வரமாகும்.

      உங்களின் எழுத்துக்களில் நகைச்சுவை மிளிர்வதை நான் பலமுறை கவனித்துள்ளேன். அந்த தங்களின் தனித்தன்மையை/தனித்திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்டால், மிகச்சுலபமாக எதிலும் வெற்றிபெற முடியும்.
      வாழ்த்துகள்.

      >>>>>

      Delete
    4. //ஒன்றை சொல்லியேயாக வேண்டும். உங்கள் கருத்துரையை என் கதையின் வெற்றியாக எடுத்துக் கொள்கிறேன்.//

      வாசகனை ஏதோ ஒரு விதத்தில், கொஞ்சமாவது சிந்திக்கச்செய்த / பாதிக்கச் செய்த அனைத்துப்படைப்புக்களுமே எழுத்தாளருக்கு வெற்றிதான். அந்த விதத்தில் என்னை சற்றே சிந்திக்கவும் பாதிக்கவும் வைத்த இந்தத் தங்களின் படைப்பும் வெற்றிப்படைப்பு என்றே நீங்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.

      Delete
  12. கதை சொன்னவிதம் அழகாக உள்ளது.

    அஷயா பக்கம்தான் நானும். எந்த முகத்தை வைத்துக்கொண்டு இராமன் மைதிலியை மீண்டும் பார்க்க வந்தான் ? கடைசியில் அவன் எடுத்த முடிவு நன்று.

    ReplyDelete
    Replies
    1. இங்கு வந்துள்ள அக்ருத்துரைகளைப் பார்க்கும் போது, இராமனை தவறிப் போய் வலைப் பக்கம் வந்தால் தர்ம அடி வாங்குவான் என்றே நினைக்கிறேன். அதையே என் வெற்றியாக எடுத்துக் கொள்கிறேன்.
      உங்கள் வருகைக்கும், அக்ஷ்யாவிற்காக நீங்கள் உயர்த்தும் கரத்திற்கும் நன்றி சித்ரா.

      Delete
  13. மனதை தொடும் கதைகளம்....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி அனு.

      Delete
  14. இரண்டு தலை முறைக் கதை. எண்ணங்கள் நாட்பட நாட்பட மாறிக் கொண்டே இருக்கிறது. இருந்தாலும் தெய்வம் நின்று கொல்லும் என்பது நிஜமோ என்று எண்ண வைத்தது. கதை உங்கள் கற்பனை. இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று சொல்ல நான் யார்.? வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. கதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
    கதை என்றாலும் கதை படித்தவுடன் மனது மிகவும் கஷ்டப்பட்டது உண்மை.

    ReplyDelete
  16. அருமையான கதை. மனதில் அப்படியே பதிந்துவிட்டது

    ReplyDelete
  17. கதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
    By-Maheshwaran
    (Sorry akka Tamil la comment panna mudiyala epdi nu theriyala)

    ReplyDelete
  18. நல்ல முடிவு!
    ஆனாலும் ராமன் கருவி மட்டுமே, இந்த கருவியை இயக்கிய விஜய் என்னவானான் என்றும் சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. என் கதை ஏன் பத்திரிக்கையில் பிரசுரமாகவில்லை என்பத. eன் காரணம் சற்றே விளங்கியது . எல்லா கதாபாத்திரங்களும் என்ன ஆனார்கள் என்பதை விளக்க வேண்டும் என்பதை மனதில் இருத்திக் கொண்டேன். உங்கள் எண்ணங்களைப் பளிச்சென்று சொன்னதற்கும், என் எழுத்தை செம்மைப் படுத்திக் கொள்ளும் விதத்தைக் கோடிட்டுக் காட்டியதற்கும் மிக்க நன்றி சித்ரா.
      நன்றி.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்