Friday 18 November 2016

பிரியாவும் , ஔவையாரும்

"நீ இந்த புடைவையை எங்கே வாங்கினாய்? " பிரியா  கேட்க ,  நான் சற்றுப் பெருமையுடன்  என் புடைவையைப் பார்த்துக் கொண்டேன்.

" என்  கணவருடன், நான் ஷாப்பிங்  செய்த போது, இந்தக் கலரும், டிசைனும், நன்றாக இருக்கும் என்று அவர் தான் எடுத்துக் கொள்ள சொன்னார் பிரியா.. நான் அரை மனதுடன் தான் எடுத்துக் கொண்டேன், உனக்குத் தான் தெரியுமே . இந்தக் கலரில் நான் வாங்கவே மாட்டேன் என்று." சொல்லி முடிக்கவும்,

google image


சர்வர் நுரை பொங்கும் காபியை எங்கள் முன்னால் வைக்கவும் சரியாயிருந்தது. காபியின் மணம் மூக்கைத் துளைத்தது. இருவரும் பேச்சைப் பாதியில் நிறுத்தி  விட்டு காபியைக் குடித்து முடித்தோம். ஹோட்டல் பில்லைக் கட்டி விட்டு, ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தோம். இருவரும் இருப்பது ஒரே குடியிருப்பு வளாகம். வெவ்வேறு பிளாக்.

என் பிளாக்கைத் தாண்டி தான் அவள் வீட்டிற்கு போக வேண்டும். அதனால் வாயேன் கொஞ்ச நேரம் பேசி விட்டுப் போகலாம் என்று வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

வீட்டிற்குள் நுழைந்ததும், ஃபேனை  திருப்பி விட்டு உட்கார்ந்தோம்.

பேச்சு அங்கே இங்கே சுற்றி , மீண்டும் என் புடைவைக்கே வந்தது.
பிரியா ,"  என் கணவர் புடவைக் கடைப் பக்கம் திரும்பிப் பார்க்கக்  கூட மாட்டார்."  என்று அலுத்துக் கொண்டாள்.
சட்டென்று அவளுக்கு  ஏதோ நினைவிற்கு வர,

" இவர் போன வாரம் என்ன செய்தார் தெரியுமா? இங்கே முதியோர்கள் எல்லோரும் சேர்ந்து கிளப் ஆரம்பித்திருக்கிறார்கள் இல்லையா?." என்று தொடர்ந்தாள்.

" ஆமாம்."

"அவர்கள் எல்லோரையும்  இவர் வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்தார்."

" அதனால் என்ன? நீயும் உட்கார்ந்து, அவர்களோடு  அரட்டை அடிக்க வேண்டியது தானே பிரியா.." இது நான்.

" என்ன அரட்டை வேண்டியிருக்கு சொல்லு ? அரசியல் பேச எனக்கு முடியாது.  அரட்டையோடு  விட்டாரா இவர்? எல்லோரும் காபி குடித்து விட்டுப் போனால் தான் ஆயிற்று என்று சொல்லி விட்டார். " சொன்னாள் பிரியா.

"காபி தானே பிரியா! நீயோ சமையல் ராணி. இதெல்லாம் பெரிய விஷயமா என்ன உனக்கு?"

"அதெல்லாம் சரி ராஜி. காபி போட பால் வேண்டுமா இல்லையா ? சொல்லு. . எப்பவும் ஒரு பாக்கெட் எக்ஸ்ட்ரா  இருக்கும் . நேற்று ஒரு பாக்கெட்  பால் பிரிந்து போனது. அது இவருக்கும் தெரியும். நாங்கள் இருவர் தானே. இருக்கும் இரண்டு டம்ளர் பாலை வைத்து  சமாளித்துக் கொண்டால் மீண்டும் நாளைக்குப் பால் வாங்கி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இருக்கும் இரண்டு டம்ளர் பாலில்  எட்டு   பேருக்குக் காபியா சொல்லு ."

"கஷ்டம் தான் " ஒத்துக் கொண்டேன்.
"ஆண்களுக்கு நம் கஷ்டம் புரியாது பிரியா. எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கலாமே . என்னிடம் பால் இருந்தது.நான் கொடுத்திருப்பேனே.  ."
" அப்புறம் எப்படி சமாளிச்சே ?" கேட்டேன்.

"இதில் ஷர்மாவும்,  கோபாலும் வேண்டாம்.... எங்களுக்குக் காபி வேண்டாம் என்று கெஞ்சி, கெஞ்சிக் கேட்டுக் கொண்டாலும் , அதெப்படி  நீங்கள் வேண்டாம் என்று சொல்லலாம் . எங்கள்  வீட்டுக் காபி  ரொம்பவே  நல்லா இருக்கும். பிரியா , நீ காபி போடு. அவர்கள் குடிப்பார்கள்  "  என்று
மகாராஜா, சேவகனைப்  பார்த்து  சொல்வது போல்,எனக்கு ஆர்டர் போட , என்ன செய்வது என்று புரியாமல்   நான் முழிக்க, அதற்குள்  ஷர்மாவிற்கு  வந்த போன் தான் ஆபத்பாந்தவனாய்  காப்பாற்றியது.

"அவசர போன் என்று அவர் கிளம்பி விட அவருடன் இன்னும் இரண்டு மூன்று பேர் போய் விடவும், ஐந்து பேர் தான் இருந்தார்களா....
டீ போட்டு சமாளித்தேன்." என்று முடித்தாள்.

"அப்பாடி.... ஒருவழியாய்  சமாளித்தே பிரியா " நான் பெருமூச்சு விட....

"அப்புறம் நடந்ததைக் கேளு ..."பிரியா தொடர்ந்தாள்.

"எல்லோரும் போன பின்பு, என்றுமில்லாத திருநாளாய்,  இவர்  டீ குடித்த டபரா, டம்ளர் எல்லாம் எடுத்து வந்து சிங்க்கில்  போட்டு,  விம் கொடு .... நானே தேய்த்து விடுகிறேன் என்று என்னிடம் சொல்கிறார். இவர் கிச்சனில் எனக்கு உதவி செய்கிறாரா........ ? அசந்து விட்டேன் ராஜி...பிறகு தான் எனக்குப் புரிந்தது .. என்னை சமாதானப்படுத்துகிறாராம். " கோபத்தோடு சொன்னாள் பிரியா .

பிரியாவின் அன்புக் கணவர்  நிலையை நினைத்து எனக்குள் பொங்கி வந்த சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருந்தேன். நல்ல வேளை . சில நிமிடங்களில்  பிரியா கிளம்பி விட்டாள்.

இத்தனயும்  கேட்டுக் கொண்டு உள்ளிருந்து என்னவர் வெளியே வந்து ," உன்  
பிரண்ட்  ,  அனந்துவை( பிரியாவின்  கணவர்) ஒரு வழி  பண்ணி  விட்டாற் போல் தெரிகிறதே, என்று  சொல்லவும்  நான் அவரிடம் சொன்னேன்,

"இன்று,  நேற்றல்ல ...... விருந்தாளிக்காக  மனைவியிடம்  மாட்டிக் கொள்ளும் கணவர்கள்,  ஔவையார் காலத்திலிருந்தே இருக்கிறார்கள். "

"உனக்கு எப்படித் தெரியும்?'

ஔவையார் சொல்லித் தான் .

" ஓ....ஔவையாரை வழியில் பார்த்தாயா ? அப்பொழுது உன்னிடம் சொன்னாரா  இந்த மாபெரும் தத்துவத்தை.?" கிண்டலடித்தார்  இவர்.

"நான் பார்க்கவில்லை,....."   என்று தொடர்ந்தேன்
" ஔவையாரை, வழியில் பார்த்துத், தன் வீட்டிற்கு வந்து சாப்பிட்டால் தான் ஆயிற்று என்று  அழைத்து செல்கிறான்  ஒருவன்.  ஆனால் அதற்காக மனைவியிடம்,  அவன்  முறத்தால்  அடி வாங்கியதை  , பொல்லாத கிழவிப்  பார்த்து  விட்டு ஒரு பாட்டுக்  கட்டி விட்டாள் பாருங்களேன்."என்றேன்.


"இருந்து முகந்திருத்தி யீரோடு பேன்வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக
ஆடினாள் பாடினா ளாடிப் பழமுறத்தாற்
சாடினா டோடத் தான் "


(இப்பாடலை தமிழ் இணையக் கல்விக் கழகம்  பக்கத்தில்  காண இங்கே கிளிக்கவும். நன்றி www.tvu.org)

"ஔவையாரை விருந்தினராக  அழைத்து சென்றவன், உள்ளே தனிமையில் தன மனைவியை தாஜா செய்கிறானாம். எப்படி என்கிறீர்கள்.? மனைவிக்குத் தலையை சீவி, அதோடு   தலையிலிருந்து, ஈர், பேன் எல்லாம் எடுத்து விட்டு, முகத்திற்கு மேக்கப் போட  உதவி செய்து, பின்னர் மெதுவாகத் தயங்கி, தயங்கி  ஔவையார் விருந்துக்கு வந்திருப்பதை   சொல்கிறான்.  அதைக்  கேட்டதும் . அவளுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லையாம்.  கணவனை திட்டித் தீர்த்து . ஒரு ஆட்டமே ஆடிவிட்டாள் என்கிறார் ஔவையார்.
அப்படியும் அவள் கோபம் அடங்கவில்லையாம்.  முறம் , அதுவும் பழைய  முறத்தால்  கணவனை வெளுத்து வாங்கி விட்டாளாம். ஓட ஓட  விரட்டி  அடித்தாளாம். "

என்று  முடிக்கவில்லை நான்......
.
 " இப்பொழுது என்ன சொல்ல  வருகிறாய்? அனந்துவை  ஜாக்கிரதையாக இருக்க சொல்லணுமா ? " என்னவர் சீரியசாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க ....

அவரைப் பார்த்து, "பாட்டு சொன்னால் ரசிக்கத் தெரியணும்,  கேள்வி கேட்கக் கூடாது.." சொல்லி விட்டு  நகர்ந்தேன்.


18 comments:

  1. விடயங்களை அழகாக கோர்த்து ஔவையாரோடு சேர்த்து விட்டீர்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி கில்லர்ஜி.
      தாமதமாக நன்றி சொல்வதற்கு மன்னிக்கவும்.

      Delete
  2. நல்லா நகைச்சுவையாக இருக்குது இந்தப்பதிவு.

    சில கணவர்மார்கள் இப்படித்தான் .... கையிருப்பினைப்பற்றி அறியாமலேயே விருந்தினரை அழைத்து வந்து, இங்கிதம் தெரியாமல் பாடாய் படுத்தி விடுவார்கள். அந்த மனைவி பாடு மிகவும் கஷ்டமாகிப் போய்விடும்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. முதலில் தாமதமாக நன்றி சொல்வதற்கு மன்னிக்கவும் கோபு சார்.
      நீங்கள் சொல்வது போல் பல வீடுகளில் நடக்கிறது.
      வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சார்.

      Delete
  3. பண்டரிபுரம் ஸ்ரீ பாண்டுரங்கனின் பரம பக்தராய் இருந்த துக்காராம் என்பவரும் இதுபோலவேதான் இருந்துள்ளார். அவர் மனைவி பெயர் ஜீஜாபாய்.

    துக்காராமுக்கு தன் வீட்டில் உப்பு, புளி, கடுகு, மிளகாய் இருக்கா என்றே ஒன்றும் தெரியாது. சமயத்தில் தனக்கு ஒரு வீடு உள்ளது என்றும் கூடத் தெரியாமல், குழந்தைபோல இருப்பார். எப்போதும் பாடிக்கொண்டும் பஜனை செய்துகொண்டும் இருப்பார்.

    ’ஜெய ஜெய விட்டல் ... ஜெய ஹரி விட்டல்’ என்று பாண்டுரெங்க பக்தர்கள் ஒரு நூறு பேர்கள், பண்டரிபுர யாத்திரிகர்களாக தெருவில் போய்க்கொண்டு இருந்தால், அவர்களை ஓடிப்போய் விழுந்து நமஸ்கரிப்பார்.

    ”எல்லோரும் வந்து நம் ஆத்தில் (வீட்டில்) சாப்பிடலாமே” என்று சொல்லி அனைவரையும் அழைத்து வந்து தன் வீட்டு வாசலில் உட்கார வைத்துவிடுவார். அப்போது மட்டும்தான் தனக்கு ஒரு வீடு உள்ளது என்ற ஞாபகமே அவருக்கு வரும்.

    உள்ளே போய் தன் மனைவி ஜீஜாபாயிடம் “பாண்டுரங்க பக்தாள் எல்லோரும் .... பாகவதாள் எல்லோரும் வந்திருக்கிறார்கள் .... அவாளுக்கு ஏதேனும் சாப்பாடு போடு” என்பார்.

    அவர்கள் வீட்டில் ஒரு மளிகை சாமான்களும் இருக்காது.

    ஜீஜாபாய் கஷ்டப்பட்டு, இங்குமங்கும் ஓடிப்போய் தன் மூக்குத்தி போன்ற எதையாவது கடையில் அடமானம் வைத்துவிட்டு, பணம் வாங்கிவந்து, சாமான்கள் வாங்கி வந்து 100 பேருக்கும் ரொட்டி சப்ஜி போன்ற ஏதாவது செய்து அனைவருக்கும் ஆகாரம் போட்டு விடுவாள்.

    யாத்திரிகர்களும் பஜனைகள் செய்து ஆடிப்பாடிக் களித்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு, அவர்கள் பாட்டுக்குக் கிளம்பி விடுவார்கள். துக்காராம் எப்படி நமக்கெல்லாம் சாப்பாடு போட்டார் என்பதைப்பற்றி யாரும் கவலையே படமாட்டார்கள்.

    எல்லோரும் புறப்பட்டு வெளியே போனபின் ஜீஜாபாய் துக்காராமைப் பிடித்து விளாசு விளாசு என்று விளாசுவாள். மிகவும் கோபித்துக் கொள்வாள்.

    ஆனால் அவருக்குக் கோபமே வராது. எப்போதும் சிரித்துக்கொண்டே சமாளித்து விடுவார்.

    ”வந்திருந்த பாகவதாள் எல்லோருக்கும், எப்படியோ சமைத்து, கண்ணியமாக சாதம் போட்டு அனுப்பிவிட்டுத்தானே என்னை நீ கோபித்துக்கொள்கிறாய். அவர்கள் எதிரில் என்னை நீ கோபித்துக்கொள்ளவில்லையே, நீ ஸத்குணவதி ஜீஜா, நீ எனக்குக் கிடைத்ததே அந்த பாண்டுரங்கன் அருளாலே”, எனச்சொல்லி, கோபித்துக்கொள்ளும் மனைவியை அப்படியே உருகி அழச் செய்து விடுவார்.

    இருந்தாலும் சுத்த ரெண்டுங்கெட்டானாக இருந்துள்ள துக்காராமால், அந்த அம்மா ஜீஜாபாய்க்குத்தான் மிகவும் கஷ்டம். பாவம் .... இவரைக்கட்டிக்கொண்டு அழவேண்டிய நிலை அவளுக்கு.

    சமீபத்தில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு மஹாராஷ்ட்ர மாநிலம் புனே அருகே இன்றும் உள்ள தேஹூ என்ற கிராமத்தில் வாழ்ந்துள்ள பரம பக்தரான துக்காராம், உயிருடன் வைகுண்டா ரோகணம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வைகுண்டபதியான மஹா விஷ்ணு, துக்காராமுக்காக ஸ்பெஷலாக புஷ்பக விமானத்தினை அனுப்பி, பொதுமக்கள் பலரும் பார்க்கும்போதே, அவரை அதில் ஏற்றி வைகுண்டத்திற்கு உயிருடன் அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்தார் என அவரைப்பற்றிய சரித்திரம் சொல்கிறது.

    துருவனுக்கும் துக்காராமுக்கும் மட்டுமே இதுபோல வைகுண்டா ரோகண பாக்யம் கிடைத்துள்ளதாகச் சொல்லுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தெரியாத செய்தி ஒன்று சொநனதற்கு நன்றி கோபு சார். உங்கள் கைவசம் இது போல் நிறைய ஆன்மீக செய்திகள் உங்களிடம் நிச்சயமாய் இருக்கும். அதையெல்லாம் பதிவாக்குங்களேன்.
      மீள் வருகை தந்து அருமையான செய்தி ஒன்று சொல்லி சென்றதற்கு மிக்க நன்றி கோபு சார்.

      Delete
  4. Replies
    1. நன்றி ஜெயக்குமார் சார். தாமதமான நன்றியுரைக்கு மன்னிக்கவும் .

      Delete
  5. அருமையான பதிவு.

    பிரியாவும், ஒளயைராரின் பாடல் பகிர்வும் அருமை.
    ஒளயையார் படத்தில் இந்த சம்பவம் வரும் பார்த்து இருக்கிறேன்.
    சுந்தரிபாய் நன்கு நடித்து இருப்பார். (கணவனை கோபித்து கொள்ளும் மனைவியாக)

    கோபாலகிருஷ்ணன் அவர்கள் சொன்ன கதையும் படித்து இருக்கிறேன், திரைப்படமாகவும் பார்த்து இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றியுரை தாமதத்திற்கு மன்னிக்கவும்.
      உங்கள் வருகைக்கும், என் பதிவை ரசித்துப் படித்துப் பாராட்டுவதற்கும் நன்றி கோமதி.

      Delete
  6. ஔவையாரின் பாடலை அருமையாக இணைத்து அழகான பதிவு..

    எதற்கும் - வீட்டு நிலையறியாத கணவர்கள்
    உஷாராக இருந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்!..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி துரை சார். காலதாமதமான நன்றிக்கு மன்னிக்கவும்.

      Delete
  7. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி சார்.

      Delete
  8. பிரியாவையும் ஒளவையாரையும் இணைத்தது அருமை!! ஒரு டீக்கா இவ்வளவு பிரச்சனை!!!
    வேண்டா விருந்தாளிகள் வரும் நேரத்தில் என் அம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதையும், அவர்கள் சென்ற பிறகு அப்பாவின் பயம் தெரிவதையும் பலமுறைப் பார்த்துள்ளேன்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி அருள்.

      Delete
  9. சங்கப் பாடலுக்கேற்ற இந்நாளைய நகைச்சுவைக் கதை சூப்பர் !

    இப்பாடலை ஆசிரியை நடத்தியிருப்பதாக நினைவு. உங்கள் பதிவால் மீண்டும் படித்தாயிற்று. நன்றிங்க !

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் தாமதமாய் நன்றி சொல்கிறேன். மன்னிக்கவும் சித்ரா. நன்றி.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்