Sunday 26 January 2014

அது ஒரு கனாக் காலம் .





" Delhi Shivers in Cold " செய்தியைப் படித்ததும் ,எனக்கும் டெல்லிக் குளிர் நினைவில் வந்து மோதியது. நினைத்ததுமே, குளிரத் தொடங்கி விட்டது.

சென்னையிலேயே பிறந்து, வளர்ந்து,  சிங்காரச் சென்னையிலேயே  திருமணத்திற்கு பின்னும், வாழ்வதைப் பாக்கியமாகவே, நினைத்துக் கொண்டிருந்தேன்.திருமணமாகி  ,ஆறு மாதக் காலத்திற்குள்ளாகவே   அதற்கு  வேட்டு வைத்து விட்டனர், என் கணவர் வேலை பார்க்கும் , வங்கியினர்.

ஒரு நாள் மாலை  ஆபிசிலிருந்து வரும் போதே  சந்தோஷத்துடன் வந்தார், என் கணவர். என்ன என்று கேட்டதற்கு  , "ஐயாவை டெல்லிக்கு  மாற்றி விட்டார்கள் " என்று சொன்னவுடன்  முதலில் எனக்குத் தோன்றியது, "பிறந்த வீட்டை விட்டு அவ்வளவு தூரம்  நம்மால் போயிருக்க முடியுமா " என்பது தான். ( அதனால் தான் என்னவருக்கு  மகிழ்ச்சி என்று நினைக்கிறேன்.)

இப்பொழுது போல், போன்  வசதியில்லாத நாட்கள் அவை. பிறந்த வீட்டுடன் தொடர்பு  என்பது, தபாலகாராரின்  வீசியெறியும்  கடிதத்தில்  அல்லவா இருக்கும்.   ஆனாலும் வேறு வழியில்லை . அதனால் டெல்லி வாழ்க்கைக்கு என்னைத் தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன்.  டெல்லி போய்  வந்தவர்கள், அங்கே குடித்தனம் செய்தவர்கள், செய்கிறவர்கள் என்று எல்லோரிடமும்  டெல்லியைப்  பற்றிக் கேட்க ஆரம்பித்தேன்.

நான் கேள்விப் பட்டவரையில், பெருவாரியாக என்னைப் பயமுறுத்திய விஷயங்களில் ,ஹிந்தியைத் தவிர ,இன்னொன்று  டெல்லிக் குளிர் .

அட......போ........ மார்கழி மாதத்தில் , காலை  நாலு மணிக்கெழுந்து,  பச்சைத் தண்ணீரில் குளித்து, திருப்பாவையும்,திருவெம்பாவை  சொல்லி விட்டு  பிறகே சூடாக காபிக் குடிப்பவள் தானே நீ. . . டெல்லிக் குளிர் அதைவிடவா அதிகம்? இதற்கெல்லாமா பயப்படுவது? என்று  தைரியம் கொடுத்தது   என் மனசாட்சி. நானும் அதையே நம்பினேன்.

ஆனாலும், எதற்கும் இருக்கட்டும் என்று இரண்டு ஸ்வெட்டர், ஷால்  என்று  கவசங்களுடன் தான், டெல்லியில் இறங்கினோம் . நாங்கள் குடித்தனம் ஆரம்பித்தது  நவம்பரில் .

என் கணவர் வீடு பார்த்திருந்ததோ  கரோல்பாகில், W.E.A .6A பிளாக்கில். ஐந்து நிமிட  நடையில் ,பக்கத்திலேயே அஜ்மல்கான் ரோட்.  ஒரு சின்ன  " மால்  " ஒன்றைத் தெருவில் பிரித்துப் போட்டது போலிருக்கும்  அஜ்மல்கான் ரோடில்  பெரும்பாலும் எல்லாமே கிடைக்கும்.

டெல்லியின் பல பாகங்களிலிருக்கும் தமிழர்களை,   கரோல்பாக்கில் காணலாம். இங்கு தான் தேங்காய், காபிப் பொடி, அப்பளம்,சாம்பார் வெங்காயம் ,தினத்தந்தி, விகடன், குமுதம்  போன்ற  நம்மூர்  விஷயங்கள்  எல்லாமே  கிடைக்கும். இங்கு தெருவில், கடை வைத்திருக்கும்   ,ஸ்வெட்டர்  வாலாக்கள் நம் தமிழ் முகத்தைப் பார்த்தால், நம் அருகிலேயே வந்து, பத்திரிகை வைக்காத குறையாக,அவர்கள் ஸ்வெட்டர்  கடைக்கு  அழைத்தப் போவார்கள்.

எப்படித் தமிழர்களை  அடையாளம்  காண்கிறார்கள் ? என்று கேட்காதீர்கள். அது தான் ஹிந்தியில் தட்டுத் தடுமாறி ' கம்பள் சாயியே ' என்று கேட்கிறோமே. .அது போதாதா?
குளிர் என்று சொல்லிக் கொண்டே டெல்லி அஜ்மல்கான் ரோட்டை சுற்றிக் காட்டுகிராளே  என்று சலித்துக் கொள்ள வேண்டாம். அங்கு தான் நாங்களும்  " கம்பள்  ஸ்வெட்டர் " வாங்கிக் கொண்டோம்.

நவம்பர் மாதம் அவ்வளவாக குளிரவில்லையா, இல்லை எங்களுக்கு குளிர் தெரியவில்லையா என்பது புரியவில்லை. அதனால் நாங்கள் ஸ்வெட்டர் போட்டுக் கொள்ளாமலே  சுற்றிக் கொண்டிருந்தோம். எங்கள் பக்கத்து வீட்டிலிருக்கும் "  மிண்டு " ," பாபிஜி , இப்படியே ஸ்வெட்டர் போடாமல் இருக்காதீர்கள். உடல் நலம் பாதிக்கும்  " என்று  ஹிந்தியிலேயே  இலவச ஆலோசனை கொடுப்பார்.

இதைப்போல் பக்கத்து வீட்லிருப்பவரை  , அண்ணனின்  மனைவியாக பாவித்து  முப்பது வருடங்கள் முன்பு தான். இப்போதோ ' பாபிகள் ' எல்லாம் ' ஆன்டி'களாகி விட்டார்கள். (வயதானதால்  ஆன்டிகளாகவில்லை) ஹிந்தியிலிருந்து , ஆங்கிலத்திற்குத் தாவி விட்டதை சொல்கிறேன்.  பாபியில் இருக்கும்  அன்பு கலந்த மரியாதை, கண்டிப்பாக அன்னிய மொழியில் இல்லையே .

ஆமாம், இந்தப் பாசமான பக்கத்து வீட்டுக் காரர்களை ,  டெல்லியில் மட்டுமல்ல ,சென்னையிலும் ,இப்போதெல்லாம்  பார்க்க முடிவதில்லையே.!
எங்கே சென்றிருப்பார்கள் இவர்கள் எல்லோரும்?

இந்தக் குளிரில் எல்லோர் உடையும்  பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக   இருக்கும். உள்ளே அரை பனியன்  சைசில் ஒரு  ஃஆப் ஸ்வெட்டர் , பிறகு நாம் போட்டுக் கொள்ளும் டிரெஸ் . அதற்கு மேல் ஃ புல்  ஸ்வெட்டர். , தலையில் குரங்கு குல்லாய், பெண்களாயிருந்தால் இந்த அலங்காரங்களுடன்  ஒரு ஷால் ஒன்று போர்த்திக்  கொண்டு தான் அலைவார்கள். எல்லோருமே பார்ப்பதற்கு ,' ரோஜா 'படத்தில் வரும்  தீவிரவாதிகள், போலவே இருக்கும்.

ஆனால் , எல்லாப் பெண்களின் கையிலும், இரண்டு ஸ்வெட்டர் ஊசியும், ஒரு நூல் கண்டும்  அவசியம் உண்டு. எப்பவும், போகும் போது , வரும் போது , என்று எப்பவுமே  ஸ்வெட்டர் பின்னிக் கொண்டேயிருப்பார்கள். வாய் பேசும், கண்  வேறெங்கோ பார்க்கும், ஆனால் ஸ்வெட்ட்டர் பின்னுவது   மட்டும் நிற்காது.கரெக்டாக ஒரு ஊசி மேல் இன்னொரு ஊசி தவறாது மேலும் கீழுமாக ஓடிக் கொண்டுஇருக்கும்.  கையை நல்ல சூடாக  வைத்துக் கொண்டிருக்கும் வழி என்று நினைப்பதுண்டு.

அந்த ஊர் பெண்களின்  சுறுசுறுப்பு  நம்மை அசத்தும் . ஏகப்பட்ட துணி மூட்டையை(குளிருக்காக) உடையாய்  உடுத்திக் கொண்டு   எல்லா வேலையும் சர்வ சாதரணமாக  செய்து கொண்டிருப்பார்கள். எனக்கோ ரஜாயை  விட்டு  வெளியே வரவே மனம் வராது. எப்படித்  தான் இவர்களெல்லாம் வேலை செய்கிறார்களோ என்று தோன்றும்.

இந்தக் குளிரில் தண்ணீரைப் பற்றி சொல்லவே வேண்டாம்.  குழாயைத் திறந்து கைகளில் தண்ணீர் படும் போதே , வலி உயிர்போகும். அத்தனை ஜில்லென்று இருக்கும் இந்தத் தண்ணீரில் எப்படி குளிப்பது? இப்பொழுது போல் அப்பல்லாம்  கீய்சர்  கிடையாது. இம்மர்ஷன் ஹீட்டர் தான்.  அதில் தண்ணீரை எவ்வளவு தான் சூடு செய்தாலும் குளிக்கும் போது நடுங்கிப் போய்
விடுவோம்.
அந்த ஊரில் தான் ஷாம்பு  குளியல் என்றால், நிஜமாகவே  வெறும் தலையை மட்டும் குழாயடியில் காண்பித்துக் குளிக்கும் அதிசயம் கண்டேன்.(குளிரினால் தான்)

டிசம்பர் இறுதியிலும், ஜனவரியிலும்   வெளியே பார்த்தால் , இரண்டடிக்கு மேல்  உங்கள் கண்ணிற்குத் தெரு  தெரியாது. பேசுவதற்காக வாயைத் திறந்தால் , சிகரெட் எதுவுமில்லாமலே  வாயிலிருந்து புகைப் புகையாக காற்று வரும். பள்ளி சிறுவர்களுக்கு இது ஒரு பெரிய விளையாட்டு.

உணவு முறையோ சொல்லவே வேண்டியதில்லை. கனவில் தான் இட்லி சாப்பிட வேண்டும். மாவு ஒரு வாரமானாலும் புளிக்காது. டெல்லியில் ,தயிர் உறைய வைப்பதைப் பற்றி, ஒரு புராணமே எழுதியிருக்கிறேன்.அதைப் படிக்க இங்கே 'க்ளிக்'கவும்.கேரட்டும், தக்காளியும், உருளைக்கிழங்கும், பச்சை காய்கறிகள் எல்லாமே  ரொம்ப சல்லிசாக கிடைக்கும். அடிக்கடி ' காஜர் அல்வா ' சாப்பிடலாம், டையாபிடிஸ் இல்லையானால் .. நாம் வில்லன் ரேஞ்சில் வைத்திருக்கும், உருளைக்கிழங்கு அவர்களுக்கு  ஹீரோ .மூட்டை மூட்டையாக வாங்குவார்கள். பழங்கள், அதிலும்' சேப் ' ,  பயங்கர ' சீப்'. (ஆப்பிள்).


இப்படிப் பட்ட ஒரு குளிரில் நான் மாட்டிக் கொண்டு  அவஸ்தைப் பட்டது ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை  சுமார் ஐந்து வருடங்கள்.. குளிர் காலம் தான் இப்படியிருக்கும் என்றால், வெயில் காலமோ, அவ்வப்போது  ஆந்தி வந்து  பாடாய் படுத்தும்.

இதையெல்லாம்  சுமார் ஐந்து வருடங்கள் அனுபவித்த நான் , அந்த ஐந்து  வருடங்களும் சென்னையை நினைத்து ஏங்காத நாளேயில்லை.
டெல்லிக் குளிரை நினைத்தால் இப்பவும் ஒரே நடுக்கம் தான். ஆனாலும்  அது என் இளமைக்காலம் அல்லவா? கண்டிப்பாக கனாக்காலம் தான்.

image courtesy--google.

54 comments:

  1. ஆகா! 26 வருடங்களாக 40 வயதுக்கும் மேலாக இங்கு வாழத் தொடங்கி நீளுகிறதே எமக்கு.
    இது என்ன காலமெனலாம்.
    நல்வ விவரணமாக எழுதியுள்ளீர்கள் .இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கனாக்காலம் நீண்டுகொண்டே போகிறதே! இன்னும் நீண்டு கொண்டே போக வாழ்த்துக்கள் மேடம்.
      உங்கள் வருகைக்கும், கருத்ஹ்டுக்கும் நன்றி மேடம்.

      Delete
  2. ///டெல்லியில் மட்டுமல்ல ,சென்னையிலும் ,இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லையே.!///

    இந்த காலத்தில் நீங்கள் பாசம் கொட்டினால்தான் திரும்ப கிடைக்கும். நாம் எப்படியோ மற்றவர்களும் அப்படியே.. என்ன மற்ற மாநிலத்துகாரர்கள் எளிதில் ஒட்டிக் கொள்வார்கள் நம்மவர்கள் கெளரவம் பார்ப்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. நானும் அதைத் தான் சொல்கிறேன் MTG. பாசமிகு பக்கத்து வீட்டுக்க்காரர்களில் தான் நானும், நீங்களும் வருவீர்கள். நம்மிடம் இருக்கும் பாசத்தை ஒளித்து வைத்திருக்கிறோம் என்று சொல்கிறேன்.

      உங்கள் வருகைக்கும், கருத்ஹ்டுக்கும் நன்றி MTG.

      Delete
  3. அற்புதமான பகிர்வு
    நானும் ஒரு நாடக விழா தொடர்பாக
    டெல்லியில் ஒரு வாரம் அந்தக் குளிர் காலத்தில்
    இருந்துப் பட்ட அவஸ்தைகளை இந்தப் பதிவு
    ஞாபகப் படுத்திப் போனது,
    சுவாரஸ்யமான பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ரமணி சார்.

      Delete
  4. //எல்லோருமே பார்ப்பதற்கு ,' ரோஜா 'படத்தில் வரும் தீவிரவாதிகள், போலவே இருக்கும்.//

    :)))))))


    உங்கள் டெல்லி அனுபவங்கள் படிக்க சுவாரஸ்யமாய் இருந்தன.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  5. // ' பாபிகள் ' எல்லாம் ' ஆன்டி'களாகி விட்டார்கள். (வயதானதால் ஆன்டிகளாகவில்லை) ஹிந்தியிலிருந்து , ஆங்கிலத்திற்குத் தாவி விட்டதை சொல்கிறேன். பாபியில் இருக்கும் அன்பு கலந்த மரியாதை, கண்டிப்பாக அன்னிய மொழியில் இல்லையே //

    உண்மை நீங்கள் சொல்வது.
    .

    குளிர் காலம் தான் இப்படியிருக்கும் என்றால், வெயில் காலமோ, அவ்வப்போது ஆந்தி வந்து பாடாய் படுத்தும்.//

    மண்புயல் (ஆந்தி) பார்த்து இருக்கிறேன் டெல்லியில்.
    இளமைக்காலம் கனாக்காலம்தான்.
    அருமையான நினைவுகள் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  6. ஓசியிலேயே உங்ககூட ஒட்டிக்கிட்டு உங்க டெல்லி குளிரை நாங்களும் சுகமாக(!) அனுபவித்தோம். ஜில் தண்ணி குளியல் எல்லாம் நினைத்துப் பார்க்கவே பயமா இருக்கு.

    இன்றைக்கும் எனக்கும், எங்க பாப்பாவுக்கும் போட்டியே நடக்கும் "யார் அதிகமா புகை விடுறாங்கன்னு".

    ReplyDelete
    Replies
    1. புகை விடும் விளையாட்டை நீங்களும் விளையாடுவதுண்டா?
      நீங்களும் என்னுடன் வந்து டெல்லி குளிரை அனுபவித்தது மகிழ்ச்சியளிக்கிறது.
      நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  7. பாசமான பக்கத்து வீட்டுக் காரர்களை சென்னையில் எப்போது பார்ப்பது சிரமம் தான் - வெளியில் வந்தால் தானே...? ஓட்டம் ஓட்டம் எப்போதும் ஓட்டம் தான்...

    சிரமங்களை கூட சுவாரஸ்யமாக சொல்லி உள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் சார்,
      முன் எப்போதையும் விடவும், இப்பொழுது பக்கத்து வீட்டுக்காரர்களை கண்ணால் பார்ப்பதே அரிதாகி விட்டது. எல்லாம் காலத்தின் கோலம்.!
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  8. வழக்கம் போல இனிமையான நகைச்சுவையுடன் அழகிய பதிவு.

    இங்கேயும் - (குவைத்) குளிர் காலத்தை நினைத்தாலே - நடுக்கம் தான். கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இப்போது வரை பகலிலும் பனி மூட்டமாகத் தான் இருக்கின்றது. சாலையிலும் சில அடி தூரத்திற்கு அப்பால் ஒன்றும் புரியவில்லை.
    ஆனாலும் எனக்கு இந்தக் குளிர் காலம் தான் மிகவும் பிடித்திருக்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. குவைத் குளிர்காலம் இப்படித்தான் இருக்குமா? ஆனாலும் உங்களுக்குப் பிடித்திருக்கிறதே . நான் நடுங்கிப் போய் விடுவேன் .
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி துரை சார்.

      Delete
  9. தற்போது டெல்லியில் வீட்டுக்குள் எந்த பிரச்னையும் இருக்காது.
    இல்லை.
    அமேரிக்கா போல் இங்கும் சென்ட்ரலைச்டு ஹீட்டர்கள் இருக்கின்றன.
    இதமான குளிர் தான்.
    அது சரி. அந்த இம்மர்சன் ஹீட்டரில் நாங்கள் தண்ணீர் மட்டும் தான் சுட வைப்பீர்களா ? நாங்கள் திருச்சியில் சாம்பார் கூட செய்து இருக்கிறோம். செய்து முடித்ததும் அந்த இம்மர்சன் ராடை நன்றாக கழுவி விட வேண்டும்.
    இப்போதும் அதை பெரிய பெரிய டீ ஸ்டால் களில் பார்க்கிறோம்.
    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. இம்மர்ஷ்ன் ராடை வைத்து சாம்பார் வைத்திருக்கிறீர்களா? ஆச்சர்யபடுத்துகிறீர்கள் ஐயா. நானும் அதை வைத்து டீ , காபி போடுவதைப் பார்த்திருக்கிறேன். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், உங்கள் வலைதளத்தில் இந்தப் பதிவை பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி சுப்பு ஐயா.

      Delete
  10. நல்லதொரு பதிவு ராஜி மேடம்! டில்லி குளிரில் இதை வாசிக்கும் போதே நானும் சிறிது கிடுகிடுவென நடுங்கி விட்டேன்.. நாங்கள் நாலு வருடங்கள் சூரத் குளிரை அனுபவித்து இருக்கிறோம்! குளிரினால் ஏற்படும் துன்பங்களையும் நன்றாகவே பட்டு மீண்டிருக்கிறோம். ஆனாலும் சூரத் நியாபகங்கள் வராமல் இருந்ததில்லை.. உங்கள் எழுத்து நடை மிக அற்புதமாக இருந்தது இந்த பதிவில் :)

    ReplyDelete
    Replies
    1. மகா, உங்கள் வருகைக்கு, பாராட்டிற்கும் மிக்க நன்றி மகா. உங்கள் எண்ணங்களைப் படித்து விட்டேன் மகா. வந்து கருத்திடுகிறேன்.

      Delete
  11. டெல்லியில் குளிர் அதிகமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது உங்கள் பதிவு மூலம் அதன் கடுமை தெரிகிறது.
    //பாபி'க்கள் எல்லாம் ஆண்டி ஆகிவிட்டார்கள். 'மாமி'க்கள் காணாமலேயே போய்விட்டார்களே! மாமி என்று கூப்பிடுவதே / கூப்பிடப்படுவதே அநாகரீகம் என்று இளம் பெண்கள் கருதுவதால் மாமாவின் மனைவி கூட இப்போது ஆண்ட்டி தான்! காலத்தின் கோலம்!

    வழக்கம்போல நகைச்சுவை ரசிக்க வைத்தது.

    ReplyDelete
    Replies
    1. ரஞ்சனி, நலம் தானே! உங்களை வலைபக்கம் பார்ப்பது மகிழ்ச்சி. எச்சரிக்கையுடன் உலா வாருங்கள்.

      நீங்கள் சொல்வது போல் டெல்லி குளிர் மிக கடுமையாக இருக்கும். அதை இப்பொழுது நினைத்தாலும் நடுக்கம் தான்.அதே போல் ஏனோ ஆங்கிலத்தில் போய் தஞ்சமடைகிறார்கள் பலர். வருத்தம் தான்.

      நன்றி ரஞ்சனி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  12. கலைந்திடாத கனாக் காலம்! ரசனையோடு சொன்னீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தமிழ் சார், உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.

      Delete
  13. குளிர் வெப்பம் என்பதெல்லாம் ஒரு ஒப்பீடுதானே. சில நாட்களுக்குமுன் அப்பாதுரை சிகாகோவில், இதுவரை இல்லாத குளிர் என்று எழுதி இருந்தார்.----56டிகிரி F என்று குறிப்பிட்டு இருந்தார்....! இந்தக் குளிர் வெப்பம் என்பது வயதைப் பொருத்தும் இருக்கிறது. நான் நீலகிரி கூனூரில் இருக்கும் போது அதிகாலை பச்சைத் தண்ணீரில் குளித்திருக்கிறேன். இப்போது நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. குளிரோ வெப்பமோ எல்லாம் அனுபவம்தானே. அதை நகைச்சுவையாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாலு சார் உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  14. //ஆமாம், இந்தப் பாசமான பக்கத்து வீட்டுக் காரர்களை , டெல்லியில் மட்டுமல்ல ,சென்னையிலும் ,இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லையே.!
    எங்கே சென்றிருப்பார்கள் இவர்கள் எல்லோரும்?//

    எல்லாரும் இருக்காங்க, தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கி இருக்கிறார்கள். :( இப்போ உறவெல்லாம் தொலைக்காட்சித் தொடர் நாயக, நாயகியரோடு தான்.



    // வாய் பேசும், கண் வேறெங்கோ பார்க்கும், ஆனால் ஸ்வெட்ட்டர் பின்னுவது மட்டும் நிற்காது.கரெக்டாக ஒரு ஊசி மேல் இன்னொரு ஊசி தவறாது மேலும் கீழுமாக ஓடிக் கொண்டுஇருக்கும். கையை நல்ல சூடாக வைத்துக் கொண்டிருக்கும் வழி என்று நினைப்பதுண்டு.//

    அட, ஆமாம், நானும் இப்படித் தான் போட்டுட்டு உட்கார்ந்திருந்திருக்கேன். :)))))

    //அந்த ஊரில் தான் ஷாம்பு குளியல் என்றால், நிஜமாகவே வெறும் தலையை மட்டும் குழாயடியில் காண்பித்துக் குளிக்கும் அதிசயம் கண்டேன்.(குளிரினால் தான்)//

    டெல்லியில் பார்த்தது இல்லை; ஆனால் திபெத்தில் திபெத்தியர்கள் இப்படித் தான் குளிக்கிறார்கள். அவங்களோட மொத்தக் குளியலே இவ்வளவு தான்!:))))

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கீதா மேடம், தொலைகாட்சி வந்து உறவுகளை சிதைத்து விட்டது என்று நினைக்கிறேன். அது மட்டுமில்லாமல், பொருளாதாரம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும் மக்கள் மன நிலையும் தான். நம்மால் நகலாய்க்க தான் முடியும் வேறென்ன செய்வது!

      திபெத்தியர்களும் தலையை மட்டும் குளிக்க வைப்பார்களா? இது செய்தி எனக்கு.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கீதா மேடம்.

      Delete
  15. ராஜஸ்தானிலே ஏழு வருஷம், குஜராத்திலே ஐந்து வருஷம், ஊட்டிஅரவங்காட்டிலே இரண்டு வருஷம்னு குளிரை அனுபவிச்சதுண்டு. இதிலே ஊட்டிக் குளிரெல்லாம் ஒண்ணுமே இல்லைனு சொல்றாப்போல் ராஜஸ்தான் குளிர் வெளுத்துக் கட்டும். அந்தக் குளிரிலேயே மார்கழி மாதக் கோலங்கள் எல்லாம் போட்டு ஜமாய்ச்சிருக்கேன். இப்போ வட்டியும், முதலுமா ருமாடிஸ வலி! :))))) வேலைக்கு ஆளெல்லாம் வைச்சுக் கட்டுப்படி ஆகாது. அப்போவே 200 ரூபாய் கேட்பாங்க. அதனால் வேலைக்காரி, தோட்டக்காரி, ஸ்வீப்பர், வண்ணாத்தி, சமையல்காரி, பேபி சிட்டர், வீட்டு எஜமானினு எல்லாவிதமான வேஷங்களும் எனக்கே எனக்கு!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லும் எல்லாப் பதவிகளும் எனக்கும் கிடைத்தன. பதவி ஏற்றுக் கொள்ளவில்லைஎன்றால் யார் விட்டார்கள் சொல்லுங்கள் !

      உங்கள் மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

      Delete
  16. எமர்ஷன் ஹீட்டரிலே சாம்பாரெல்லாம் வைக்க முடியுமா என்ன? சுப்பு சார் விளையாட்டுக்குச் சொல்றாரா, நிஜமானு தெரியலை. ஆனால் நாங்க பத்தர் கொய்லா, லக்டி கொய்லானு இரண்டும் வாங்கி பாய்லரில் போட்டு வெந்நீர் தயாரா வைச்சுட்டே இருப்போம். பாத்திரம் தேய்க்க ஆள் வந்தால் கூட அவங்களுக்கும் வெந்நீர் தான் கொடுக்கணும். துணி தோய்க்கவும் வெந்நீர் கேட்பாங்க. எல்லார் வீட்டிலேயும் சென்ட்ரலைஸ்ட் ஹீட் இப்போவும் கிடையாது. அதெல்லாம் ரொம்பவே வசதியானவங்க வீடுகளில் தான்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய கிலா படித்தவுடன் தான் பக்கெட் கிலா அடுப்பு பற்றி குறிப்பிட நினைத்திருந்தேன். விட்டு விட்டேன். உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      Delete
  17. எமர்ஷன் ஹீட்டரில் சாம்பார் செய்யலாமோ கூடாதோ தெரியாது. காஃபி மேக்கரில் ரசம் வைக்கலாம். ஃபில்டரில் காஃபிப் பொடி போடாமல் கொஞ்சமாய்ப் புளி, ரசப்பொடி, உப்பு, தக்காளி, ப.மி. அல்லது மிளகு பொடி, போட்டுட்டுத் தண்ணீர் ஊத்தும் பாகத்தில் தேவையான தண்ணீரை விட்டுடணும். ரசம் ஃபில்டருக்குக் கீழிருக்கும் கிண்ணத்தில் இறங்கும். அது நீர்க்க இருக்கா, திக்கா இருக்கானு பார்த்துட்டு வேணும்னா இன்னுக் கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கலாம். அப்புறமாக் கடுகு, கருகப்பிலை, பெருங்காயம், மி.வத்தல் தாளிச்சுச் சாப்பிடலாம். அல்லது அப்படியே குடிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. சுப்பு ஐயா இம்மர்ஷன் ராடை வைத்து சாம்பார் வைக்கிறார். நீங்களானால் காபி மேக்கரில் ரசம் வைக்கிறீர்கள். உங்களுக்கெல்லாம் கேஸ் தேவையேயில்லைஎன்று நினைக்கிறேன். மீண்டும் கருத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேடம்.

      Delete
  18. திரும்ப அந்தக் காஃபி மேக்கரில் காஃபி போட்டுட்டு ரச வாசனை வருதுனு சொன்னால் நான் பொறுப்பு இல்லை. :)

    ReplyDelete
    Replies
    1. தில்லியில் காப்பியா? டீ அல்லவா போடவேண்டும்?...

      Delete
    2. செல்லப்பா சார், டெல்லியிலும் நான் அதிகம் காபி தான் குடித்திருக்கிறேன் சார். .
      டீயும் போடுவதுண்டு. ஆனால் பெரும்பாலும் காபி தான். நன்றி சார்.

      Delete
  19. அது ஒரு கனாக்காலம் --- குளிர்காலமும் கூட.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  20. இந்த ஆந்தி பத்திச் சொல்லி இருக்கீங்களே, கோடைக் காலத்தில்! அதிலே காலி ஆந்தினு ராஜஸ்தானிலே எண்பத்து எட்டிலே வந்தது பாருங்க! அதைக் குறித்துப் பதிவு கூடப் போட்டேன்னு நினைக்கிறேன். பார்க்கணும். இருட்டுன்னா அப்படி ஒரு கருமையான இருட்டு. குரல் மட்டுமே கேட்கும். ஆள் இருக்கிறது தெரியாது. :)))) அதிலே எங்க பையர் வேறே புத்தகம் வாங்கக் கடைத்தெரு சென்றவர் மாட்டிக் கொண்டு, போறும்டா சாமி! :)))))

    ReplyDelete
  21. ஹிஹிஹி, விடறதா இல்லை உங்களை! இதோ சுட்டி!http://sivamgss.blogspot.in/2012/01/2.html

    காலி ஆந்தி பத்தி எழுதி இருக்கேன், நேரம் இருக்கிறச்சே படிங்க.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆந்தி அனுபவம் ரொம்பவே சுவாரஸ்யமாய் த்ரில்லர் கதை போல் சொல்லியிருக்கிறீர்கள். கருத்திட்டு விட்டேன். நன்றி கீதா மேடம் என் பதிவிற்கு பலமுறை வந்து கருத்திட்டதற்கு.

      Delete
  22. சென்னைக்குளிரையே தாங்க முடியாதவன் நான்! டெல்லி குளிர் பற்றியும் நீங்கள் சமாளித்த விதம் அறிந்து வியப்படைந்தேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அவசியம் நீங்கள் ஒருமுறை டெல்லி குளிரை அனுபவித்துப் பாருங்கள்.பிறகு டில்லி என்று சொல்வதற்கு கூட பயமாயிருக்கும்.
      நன்றி சுரேஷ் சார் உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.

      Delete
  23. ஸ்வெட்டர் பின்னும் பாபிக்கள் இப்போதெல்லாம் ரொம்பவே குறைந்து விட்டார்கள். முன்பிருந்த குளிர் இப்போதெல்லாம் இல்லை. நிறைய மாற்றங்கள்.....

    எந்த வருடங்களில் கரோல் பாகில் இருந்தீர்கள்...... நானும் 5A/6A Block-ல் 91-94 வரை இருந்தேன்......

    சிறப்பான நினைவுகள். ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் கரோல்பாகில் எழுபதுகளின் இறுதியில் குடித்தனம் செய்தேன் வெங்கட்ஜி.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்ஜி.

      Delete
  24. தில்லிக் குளிரிலும், கோடையிலும் பத்து வருடங்கள் இருந்திருக்கிறேன்... இரண்டுமே அதிகம் தான்....:)) நானும் முதன் முதல் குளிரை எங்க கோவைல மார்கழில இல்லாத குளிரா என்று சொல்லியிருக்கிறேன்....:)))

    ஸ்வெட்டர் பின்னும் வேலையை நானும் செய்திருக்கிறேன்... எனக்காக ஒரு ஸ்வெட்டர் போட்டு இப்போவும் வைத்திருக்கிறேன்...:)

    அதை கற்றுக் கொண்ட கதையையும், தில்லி பற்றியும் இங்கே...

    http://kovai2delhi.blogspot.in/2011/01/blog-post.html

    http://kovai2delhi.blogspot.in/2010/12/blog-post_27.html

    ReplyDelete
    Replies
    1. நானும் அங்கு போய் ஸ்வெட்டர் போட கற்றுக் கொண்டேன் ஆதி. இப்பவும் போடுவேன். ஆனால் அந்த ஸ்பீட் வருவதில்லை.
      உங்களுக்கும் டெல்லியை நினைவு படுத்தி விட்டேன் என்று நினைக்கிறேன்.
      நீங்கள் கொடுத்துள்ள சுட்டிகளில் படிக்கிறேன் ஆதி.
      உங்கள் கருத்துக்கு நன்றி ஆதி.

      Delete
  25. ****ஆமாம், இந்தப் பாசமான பக்கத்து வீட்டுக் காரர்களை , டெல்லியில் மட்டுமல்ல ,சென்னையிலும் ,இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லையே.!
    எங்கே சென்றிருப்பார்கள் இவர்கள் எல்லோரும்?***

    பாசமா? அதெல்லாம் கால ஓட்டத்தில் காணாமல் போனவைங்க. "அமெரிக்க நெய்பர்கள்" எல்லாம் எவ்வளவோ மேல்னுதான் தோணும் இப்போ சென்னையில் அமையும் பக்கத்துவிட்டுக்காரர்களை நினைத்தால்..எல்லாரும் பிஸியாகிவிட்டார்கள்- பணம் சம்பாரிக்க, டி வி சீரியல் பார்க்க- இப்படி.

    டெல்லி எப்படினு தெரியலை "இங்கே" இந்த வருடம் கடுங்குளிர்!! நம்ம ஊரில் இப்போ காணாமல்ப் போன பாச்த்தை எல்லாம் நினைத்துக் கொண்டு "இந்தக் குளிரே" பரவாயில்லைனு சந்தோஷமாக வாழக் கற்றுக்கொண்டேன்னுதான் சொல்லணும். எல்லாம் நம்ம மனசில்தானே இருக்கு? குளிருக்கு அமெரிக்கன் ஃபுட்பால் இருக்கு "வார்ம் அப்" பண்ண! I must say I enjoy winter as we got NFL season during the winter :)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வருண் சார்.

      Delete
  26. நல்ல ரசனையுடன் சுவாரஸ்யமா சொல்லியிருக்கீங்க... டில்லி குளிர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், அனுபவிக்கும் பாக்கியம் கிடைத்ததில்லை....

    நான் இருக்கும் வீட்டுக்கு எதிர் வீட்டுக்காரர்கள் பாசமானவர்கள்... நாங்கள் கொஞ்சம் ஜாலியாக சிரித்துப் பேசினால் போதும், அவர்கள் வீட்டுக் கதவு டமால் என்று சாத்தப்படும்.... நாங்களும் கவலைப்படுவதில்லை, அவர்கள் வீட்டுக் கதவு தானே உடைகிறது....

    ReplyDelete
    Replies
    1. எப்படி நீங்கள் டெல்லிக் குளிரை மிஸ் பண்ணலாம். இப்பொழுது போனீர்களேன்றால் கூட அனுபவிக்கலாம். கிளம்புங்கள் ஸ்பை.

      எனக்கு வந்து கருத்திட்ட்டதர்லு நன்றி ஸ்பை.

      Delete
  27. கனாக்கால அனுபவங்களை சுவாரஸ்யமாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

    அநேகமாய் இங்கு துபாயில் இருப்பதைப்போன்ற காலநிலைதான் இப்போது அங்கும் இருக்கும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுந்தரா மேடம் உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டிற்கும். தொடர்ந்து வாருங்கள்.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்