Tuesday 26 November 2019

கம்பனும், Breaking Newsம் (கம்பன் என்ன சொல்கிறான்?-12)


Image Courtesy :https;//bhagwanbhajan.com

"அம்மா! அம்மா!"

"என்னடா....?"காய்ந்த துணிகளை மடித்துக் கொண்டே அம்மா கேட்க...

"அம்மா.... "மீண்டும் ரிஷி கெஞ்சும் குரலில் கூப்பிட...

"என்னடா வேணும் உனக்கு?" அம்மா ஸ்ட்ரெயிட் ஆக பாயிண்ட்டிற்கு வ்ந்தாள்.

" அம்மா... காலேஜுக்கு பஸ்ஸில் போக ரொம்பக் கஷ்டமாருக்குமா. "

" ஏண்டா?"

" ஒரே கூட்டம் எப்பவும். எவ்வளவு நாள் தான் ஃபுட்போர்டிலேயே  போவது... சொல்லு."

ரிஷி எதற்கு அடி போடுகிறான் என்று அம்மாவுக்குப் புரிந்து போனது. போன வருஷத்திலிருந்து பைக் வேணும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறான்.

"நான் அப்பாவிடம் பேசி உனக்குப் பைக் வாங்கித் தர சொல்றேண்டா." சொன்னவுடன் ரிஷி சந்தோஷமாக விசில் அடித்தான். 

ரிஷியை சந்தோஷமாக பார்க்க அம்மாவுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. 

அம்மாக்களே இப்படித் தான்....மகனுக்காக அப்பாவிடம் வக்காலத்து வாங்குவது...

ஆனால் கைகேயி இன்னும் ஒரு படி மேலே போனாள்...
அவளும் பரதனுக்காக அவன் அப்பாவிடம் பேசி வாங்கிக் கொடுக்கிறாளாம். பைக் இல்லிங்க....அரசாங்கத்தையே வாங்கிக் கொடுக்க நினைக்கிறாளாம். அதுவும் பரதன் கேட்காமலே. ஆனால் பரதன் அதை ஏற்றுக் கொள்ளாததோடு, கைகேயியைப் பேய் என்றும் திட்டினான் என்பது வேறு விஷயம்.

எப்படி தன் காரியத்தை சாதித்துக் கொள்கிறாள் என்று பார்ப்போம்.

கைகேயி அழுது புலம்பி, அடம் பிடித்து தன் இரண்டு வரங்களையும் தசரதனிடமிருந்து வாங்குவதில் success ஆகிறாள். தசரதன் மிகுந்த வருத்தத்துடன் தரையில் வீழ்ந்து கிடக்கிறான்.

வரம் வாங்கியாச்சு.. அதை செயல் படுத்தணுமே. காலத்தை வீணடிக்காமல் (கணவனைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல்) ராமனுக்கு ஆள் அனுப்புகிறாள் கைகேயி.

உடனே அங்கே ராமனும் ஆஜர்...

அப்பாவை பார்த்து விட்டு ராமன் பதறுகிறான்." என்ன ஆச்சும்மா அப்பாவுக்கு?"

கைகேயி அவனை முதலில் சமாதானப் படுத்துகிறாள்,"உன் அப்பாவுக்கு ஒன்றுமில்லை ராமா. அவர் உன்னிடம் எதையோ சொல்லனும்னு நினைக்கிறார். எப்படி சொல்வது என்கிற தயக்கம் தான். வேறொன்றுமில்லை."

"நீங்கள் சொல்லுங்கள் அம்மா.அப்பா சொன்னால் என்ன? நீங்கள் சொன்னால் என்ன? ரெண்டும் ஒன்று தான். நான் நிறைவேற்றுகிறேன்." ராமன் வாக்குக் கொடுக்கிறான்.

" வாக்குக் கொடுப்பதில் அப்பனை மகன் மிஞ்சி விடுவான் போலிருக்கே" கைகேயி மனதுக்குள் சிரித்துக் கொண்டிருப்பாள்.

ராமனிடம் நைச்சியமாக சொல்ல ஆரம்பிக்கிறாள்.

" அது ஒண்ணுமில்ல ராமா .... நீ புண்ணிய நதிகளில் நீராடி வரணும் ராமா."

"இதென்ன பெரிய விஷயம் அம்மா..இதோ உடனே கிளம்புகிறேன். "

" அட.... இரப்பா ராமா. நான் இன்னும் முடிக்கல.."

"சொல்லுங்கம்மா.."

"அதோடு நீ தவமும் செய்ய வேண்டும் ராமா."
எங்கே தவம் செய்யணும் தெரியுமா? காட்டிற்குப் போய் தவம் செய்யணும்."

"அப்படியே செய்கிறேன் அம்மா."(இதை...இதை.....இதைதான் நானும் எதிர் பார்த்தேன் - நினைத்துக் கொண்டிருப்பாள்  கைகேயி.)

வரிசையாக ஆர்டர் பிறப்பித்துக் கொண்டே வருகிறாள் கைகேயி.
சற்றே குழம்பியிருப்பான் ராமன். என்ன ஆச்சு அப்பாவுக்கு. "நாளையிலிருந்து நீ தாண்டா ராஜா...அப்படின்னு அப்பா ராத்திரி சொன்னார். இப்ப என்னடான்னா கைகேயி அம்மா காட்டுக்குப் போ என்கிறாள். யாரைத் தான் நம்புவதோ ...என்று தோன்றியிருக்குமோ ராமனுக்கு."

Wait Rama! Wait! Here comes 
                     the Breaking News...

கைகேயி தொடர்கிறாள், " ராமா... இன்னும் ஒன்று இருக்கு ராமா....உன் தம்பி பரதனுக்குத் தான் பட்டாபிஷேகம் நடக்கும். அவன் நாட்டை ஆளுவான். நீ ஏழிரண்டு ஆண்டுகள் முடிந்த பின் காட்டிலிருந்து திரும்ப வேண்டும்." சொல்லி விட்டு ...
(அவளால் ராமனைக் காட்டுக்குப் போ என்று சொல்ல வாய் வரலையாம். அதனால் ஏழிரண்டு ஆண்டுகள் முடிந்து காட்டிலிருந்து வா என்று சொல்கிறாளாம். வளர்த்த பாசம் தடுக்கிறதோ!)

"இதையெல்லாம் நான் சொல்லவில்லை ராமா. இதெல்லாம் உன் அப்பாவான அரசன் ஆணை. உன்னிடம் சொல்ல சொன்னார். "  என்று முடிக்கிறாள் கைகேயி.

என்னா சாமர்த்தியம்! தான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி விட்டு தசரதன் சொன்னானாம்... எப்படியிருக்குக் கதை..

சரி விடுங்கள்...அது தசரதன் தலை வலி.

இதை விளக்கும் கம்பன் பாடலைப் பார்ப்போம்...

அயோத்தியா காண்டம். கைகேயி சூழ்வினைப் படலம். பாடல் எண்.1690

"ஆழி சூழ் உலகம் எல்லாம் 
   பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இருஞ் சடைகள் தாங்கித், 
   தாங்க அருந் தவம் மேற்கொண்டு,
பூழி வெம் கானம் நண்ணிப், 
   புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ் இரண்டு ஆண்டின் வா என்று, 
   இயம்பினன் அரசன்"என்றாள்

கடலால் சூழப் பட்ட உலகம் முழுவதையும், பரதனே முடி சூடி ஆண்டுக் கொண்டிருக்க நீ நாட்டை விட்டுச் சென்று, தொங்குகின்ற பெரிய சடைகளைத் தாங்கிக் கொண்டு, தாங்குவதற்கரிய தவத்தை ஏற்று, புழுதி நிறந்த கொடிய காட்டை அடைந்து , புன்னியத் தீர்த்தங்களில் நீராடி,பதினான்கு ஆண்டுகள் கழித்த பின்பு திரும்பி வருவாய் என்று  அரசன் சொன்னான் என்றாள்.

இந்தக் கம்பன் பாடல் ரசிச்சாச்சா?மீண்டும் இன்னொரு பாடலுடன் உங்களை சந்திக்கிறேன்.

1 comment:

  1. கம்பராமாயணப்பாடல்கள் ரிவைஸ் ஆகின்றன நன்றி

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்