Thursday 9 April 2020

குலசேகராழ்வாரும், மீனும்.




"டிங் டாங்"


பக்கது வீட்டு காலிங் பெல்லை அழுத்தினேன்.

கதவைத் திறந்ததும் ," ராஜியா....வா ..வா..  நல்ல தரிசனம் கிடச்சுதா?"

"ஆமாம் மாமி. இந்தாங்கோ லட்டு. " கொடுத்தேன்.

" ஆனால் இன்னும் கொஞ்ச நாழி பெருமாளை கண் குளிர பாக்க விட்டிருக்கலாம். ஆனால் ஜருகண்டி ஜருகண்டின்னு விரட்டி விடறாளே."

அதனால் தான் குலசேகராழ்வார் அங்கேயே தங்கிடனும்னு ஐடியா பண்ணி பெருமாளை வேண்டிக்கிறார்.

முதலில் கொக்காய் பிறவி வேணும்னு வேண்டிக் கொள்கிறார். 


நல்ல வேளை. கொக்குப் பிறவி  வேணாம்னு அவரே தீர்மானித்து விட்டார். 

'அப்ஸரஸ் எல்லாம் அவரைச் சுற்றி இருக்கும்படியான ,  மேலுலகத்துத்  தலைவன் பதவியைக் கேட்பாரோ"  

சீக்கிரம் சொல்லுங்கள் ஆழ்வாரே.... 

மாட்டாரோ?

அப்படியென்றால் அட்லீஸ்ட் 'நாட்டுக்கு ராஜா' பதவியையாவது கேளுங்கள் ஐயா. ப்ளீஸ்..

ஆனால் அதையும் அவர் கேட்க மாட்டார் போல் தெரிகிறது. அவர் தான் ராஜா பதவியை தோளில் கிடக்கும் துண்டை எறிவது போல் எறிந்து விட்டு வந்தவராயிற்றே.

பிழைக்கத் தெரியாதவராய் இருக்கிறாரே.  நம்மூர் அரசியல் வாதிகளுக்கு இந்த மாதிரி சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் ......நினைக்கவே முடியாததெல்லாம் கேட்டிருப்பார்கள்.

சரி... இவர் என்ன தான் கேட்கிறார் பார்ப்போம்.

அவர் கண்களில் திருவேங்கட மலையில் இருக்கும் சுனை கண்ணில் படுகிறது. அதில் துள்ளி விளையாடும் மீன்களும் கண்ணில் படுகின்றன.

இந்த மீனாய் பிறவி எடுத்தால் எத்தனை நன்றாக இருக்கும். இங்கேயே திருப்பதி மலையிலேயே துள்ளி விளையாடிக் கொண்டு இருக்கலாம். 

அதனால்..." வேங்கடவா! எனக்கு உன் மலையில் இருக்கும் சுனையில் வாழும் மீனாய் பிறவிக் கொடேன்." வேண்டுகிறர்.


ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே

அழியாத செல்வமும், அப்ஸரஸ்கள் சூழ்ந்து நிற்க மேலுலகத்தை அரசாளுகின்ற  ஐஸ்வர்யத்தையும், இப்பூலோகத்தை அரசாளுகின்ற ஆட்சியையும், வருத்தமின்றி கிடைப்பதாயினும் எனக்கு வேண்டாம். தேன் மிக்க மலர்களுள்ள சோலைகளுடைய திருவேங்கட மலையிலிருக்கின்ற சுனைகளிலே  ஒரு மீனாக பிறக்கக் கூடிய பாக்கியம் உடையவனாவேன்.


ராஜ பதவி எங்கே? மீன் பிறவி எங்கே? மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

ஆனால் இந்த வேண்டுதலும் ஒரு வினாடிக்கும் மேல் நீடிக்கவில்லை.
" அச்சச்சோ! வேண்டாமப்பா! வேண்டாம் ! மீனாய்  பிறவி எடுக்க வேண்டாம்." அவரே மறுதலித்துக் கொள்கிறார்.

ஏனாம்?

மீனாய் பிறவி எடுத்தால் திருவேங்கடத்து சுனையில் இருக்கலாம். ஆனால் பெருமாள் அருகில் இருக்க முடியாது . அதோடு சுனை நீர், கோடை காலத்தில் வற்றி விடும் அபாயம் உண்டு. அப்ப மீனுக்கு என்ன ஆகும் ? சொல்லுங்கள்...

அதனால் வேறு பிறவி கேட்போம் என்று யோசிக்க ஆரம்பிக்கிறார்.

கொக்கு பிறவியா ம்ஹூம்..
மீனாய் பிறக்க வேண்டாம்..

அப்ப வேறு என்ன பிறவி தான் கேட்கப் போகிறார்? 

பொறுத்திருந்து பார்ப்போமா?



2 comments:

  1. சிறப்பான விளக்கம். என்னவாகப் பிறக்கலாம் என கேட்கப் போகிறார் - பார்க்கலாம்!

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்