Friday 24 April 2020

குலசேகராழ்வாரும், பாரிஜாதமும்.






திருவேங்கடன், குலசேகராழ்வாருக்குத் தரிசனம் தந்தால் எப்படியிருக்கும் என்று ஒரு சிறு கற்பனை.

இருவருக்கும் நடக்கும் உரையாடல் இப்படி இருந்திருக்குமோ?

பெருமாளைக் கண்டவுடன், குலசேகராழ்வார் அடித்துப் பிரண்டு எழுந்து, சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கிறார். 

திருமலையின் திவ்யமான அமைதியில், இருவரும் அளவளாவது நன்றாகவே கேட்கிறது.

பெருமாளே ! என்ன பாக்கியம் செய்தேன்.!  பெருமாளே! பெருமாளே! கண்களிலிருந்து நீர்  தரை தாரையாக வர புளகாங்கிதம் அடைகிறார் ஆழ்வார்.

என்னப்பா செய்யறே இங்க உட்கார்ந்து? பெருமாள் கேட்க..

பேச நா எழாமல் அப்படியே ஆழ்வார் இருக்க...

சரி... விஷயத்திற்கு வருகிறேன்...குலசேகரா.

"இது வேண்டாம்....அது வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிக் கொண்டே வந்தாயே. இப்பவாவது ஒரு முடிவுக்கு வந்தாயா இல்லையா?சீக்கிரம் சொல்லு. கேட்கும் பிறவியைக் கொடுக்கிறேன்." வேங்கடவன் சொல்ல..

யோசிக்க ஆரம்பிக்கிறார் ஆழ்வார்..

"இன்னும் ஒரு முடிவுக்கு வரலையா குலசேகரா? நானே ஒரு ஐடியா கொடுக்கட்டுமா?" சொல்லி விட்டுத் தொடர்கிறார் வேங்கடன்.

"நான் போட்டிருக்கும் மாலையைப் பார் குலசேகரா. எத்தனை மலர்கள்? என்ன வாசனையா இருக்கு பார். அதிலும் இந்த சண்பக வாசனை இருக்கே... எனக்கு அந்த மலர் ரொம்ப பிடிக்குமப்பா."

சொல்லி முடிப்பதற்குள் ஆழ்வார்," கரெக்ட் பெருமாளே. நான் உன் மலையிலேயே சண்பக மரமாய் இருந்து விடுகிறேனே. அந்தப் பிறவி கொடுத்து விடேன் வேங்கடவா.  உன் பாதத்திலும் என் செண்பக மலர் இருக்கும். நானும் இங்கேயே இருப்பேன்." 

வினாடி நேரம் தான்," எனக்கு வேண்டாம். செண்பக மரம் பிறவி வேண்டாம்." என்று அவசர அவசரமாக மறுக்கிறார்.

"ஏன் ? என்ன ஆச்சுப்பா? "

"உனக்குத் தெரியாதா பெருமாளே? யாராவது மரத்தைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு போய் விட்டால்?"

ஹா...ஹா...மரத்தை யாராவது பெயர்ப்பார்களா குல சேகரா? பெருமாள் வெடிச் சிரிப்புடன் கேட்க...

"ஏன் நீ பெயர்க்கவில்லையா வேங்கடவா?"

"நானா....மரத்தைப் பெயர்த்தேனா? அது எப்ப? புதுக் கதை சொகிறாய்."

"புதுக் கதை இல்லை பெருமாளே. எல்லாம் திரேதாயுகப் பழசு தான். கிருஷ்ணாவதாரத்தில் உன் மனைவி சத்யபாமா கேட்டார்னு,  பாரிஜாத மரத்தையே பெயர்த்தவன் தானே நீ. இல்லைன்னு சொல்ல முடியுமா உன்னால்?"
சொல்லி விட்டு,"சரியான பெண்டாட்டி தாசன்" என்று செல்லமாக முணுமுணுக்கிறார் ஆழ்வார்.

"என்ன? என்ன சொல்கிறாய் குலசேகரா?"

"ஒண்ணுமில்லையே...." குலசேகரர் தயங்க..

"என்னமோ முணுமுணுத்தாயே? பெண்டாட்டி....தாசன் என்று காதில் விழுந்ததே அதைக் கேட்டேன்.."-இது வேங்கடவன்.

"ஒண்ணுமில்ல. நீ பாரிஜாத மரத்தைப் பெயர்த்ததைத் தான்  சொன்னேன். மறுக்க முடியுமா?" குலசேகராழ்வார் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொல்ல....

அது... வந்து, அது... வந்து.... என்று பெருமாள் அசடு வழிய...

"அதனால் தான் சொன்னேன்...பணக்காரப் பெண்டாட்டி யார் கண்ணிலாவது செண்பக மரம் கண்ணில் பட்டுத் தொலைத்தால்........
பெண்டாட்டி தாசனான பணக்காரன் யோசிக்காமல் என்னை ஆள் படை வைத்துப்  பெயர்த்து எடுத்துக் கோண்டு போய் விடுவானே என்கிற பயம் தான் காரணம்." ஆழ்வார் சொல்ல

பெருமாள்," உனக்கு உதவ வந்தால்...என்னையே பெண்டாட்டி தாசன் என்று சொல்கிறாய். எனக்கு எதுக்கு வம்பு?  நீயே யோசித்து சொல்....நீ எதைக் கேட்டாலும் தயங்காமல் அருள் பாலித்து விடுகிறேன்..

சொல்லி விட்டு வேங்கடவன் திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டுகிறார்.


என்னை கற்பனை உலகத்தில் சஞ்சரிக்க விட்ட குலசேகர ஆழ்வாரின்  பாடல் இதோ...

ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே

ஒளியுள்ள பவழக் கொடிகளை கரையிலே கொணர்ந்து , கொழித்து, அலைகள் உலாவுகிற குளிர்ந்த திருப்பாற்கடலிலே யோக நித்திரை செய்தருள்கின்ற, மாயங்களைப் புரியும் எம்பெருமானுடைய திருவடிகளை சேவிக்கும்படியாக இசையையே பேசுகிற வண்டுகளின் கூட்டங்கள், பண்ணிசைப் பாடப் பெற்ற திருமலையிலே சண்பக மரமாய் நிற்கும் பாக்கியமுடையவனாவேனே.

சண்பக மரமாக வேணும் என்று வேண்டினவர், அதையும் அவரே வேண்டாமென்று மறுத்து விடுகிறார். 

ஏனாம்?

சண்பக மரத்தையே திருமலையை விட்டே பெயர்த்துக் கொண்டு போய் விட்டால்?...

ஆழ்வார் மீண்டும் யோசிக்க ஆரம்பிக்கிறார்...

எத்தனை வேண்டுதல்கள் முன் வைத்தாலும்,  சலிக்காமல் அருள் பாலிக்கிறான் வேங்கடவன் . அதனால் ஆழ்வாரும் சலிக்காமல் தன் விண்ணப்பங்களை வைத்த வண்ணம் இருக்கிறார்.

அடுத்து என்ன பிறவி கேட்கப் போகிறார்? ???.........
  
                                                                               (தொடரும்)



2 comments:

  1. கற்பனை தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. நல்லதொரு கற்பனை. தொடரட்டும்.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்