" 49 O "என்ற தேர்தல் ஒட்டுக் கருவியின் கடைசி பட்டனைப் பற்றிய பதிவு என்று நினைக்கிறீர்களா?
இல்லை.
ஆசிரியையாய் இருந்ததால் ,எனக்கு பூஜ்யத்தின் மேல் தனி அபிமானமோ என்றும் நினைக்க வேண்டாம்.
இணையத்தில் படித்த ஒரு விஷயத்தைப் பற்றித் தான் இது.
உண்மைச் சம்பவம் என்கிறது மெயில் .
ஆஸ்திரேலியாவில் ஒருவருக்கு மாதாந்திர ' கேஸ் '(cooking gas) பில் வருகிறது. நம்மைப் போல் சிலிண்டர் இல்லை போலிருக்கிறது.' கேஸ் 'பைப்ப்பில் வரும் என்று நினைக்கிறேன். அதனால் மாதாந்திர பில்.
இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இது வரை அவர் ' கேசை ' உபயோகிக்கவில்லை என்பது தான். அதனால் 'ஜீரோ டாலருக்கு ' பில் வருகிறது.நண்பர் சும்மா இருந்து விடுகிறார். இது அறியாமல் நடந்த தவறு. அதனால் அவர்களே சரி செய்து விடுவார்கள் என்று.
அடுத்த மாதமும், அதற்கடுத்த மாதமும் அதே ' ஜீரோ டாலருக்கு 'பில் வருகிறது. அதுவும் உடனே கட்டணத்தை செலுத்த சொல்லி.
(அவர் வீட்டில் சமைக்கவே மாட்டாரா? காபி .... இல்லையில்லை வெந்நீர்.......அது கூட வைத்துக் கொள்ள மாட்டாரா? என்று கேட்காதீர்கள்.
அவருக்கு திருமனமாகவில்லையோ என்னவோ? உடனே ,இளகிய மனதுடையவர்கள் , பாவப்பட்டு அவருக்குப் பெண் பார்க்க கிளம்பி விடப் போகிறீர்கள்.. நம்மூர் பையன்களே, பெண் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். இதில் அவருக்கெல்லாம் நம் ஊர் பெண் எதற்கு?. )
இப்பொழுது அந்த நண்பர் கேஸ் கம்பெனிக்கு போன் செய்ய , அவர்கள் தவறுக்கு வருத்தம் தெரிவித்து, சரி செய்கிறோம் என்று சொல்லி விட்டனர். நண்பரும் நிம்மதி பெருமூச்சு விட்டார். ஆனால் அந்த நிம்மதி அடுத்த மாத பில் வரும் வரை தான். அடுத்த மாதமும் இதே கட்டணத்திற்கு பில்.
அவர் எரிச்சலாகி இந்தத் தொல்லையிலிருந்து எப்படி விடுபடலாம் என்று யோசித்தார்.இதற்கு ஒரே வழி 'கேஸை ' கொஞ்சமாவது உபயோகப் படுத்துவது தான் என்று தீர்மானித்து, 'கேஸை 'உபயோகிக்க போனால் , இவர் பில் பணம் கட்டாததால் இவர் 'கேஸ் 'இணைப்புத் துண்டிக்கப் பட்டிருந்தது.அதோடு இன்னும் பத்து நாட்களில் பணம் கட்டும்படி ஒரு கடிதமும் வந்திருந்தது.
சரி, இவர்கள் மொழியிலேயே நாமும் பேசலாம் என்று 'ஜீரோ' டாலருக்கு செக் எழுதி 'கேஸ்' கம்பெனிக்கு அனுப்பி விட்டார்.'கேஸ்' கம்பெனியும் உங்கள் பில் செட்டிலாகி விட்டது என்று செய்தி அனுப்பி விட்டது.
(காமெடியாயில்லை!)
பிறகு தான் விஷயமே இருக்கிறது.
இரண்டு மூ ன்று நாட்களுக்குப் பிறகு வங்கி மேனேஜர் நண்பரை போனில் தொடர்பு கொண்டு "எதற்கு ஜீரோ டாலருக்கு செக் கொடுக்கிறீர்கள் ?"என்று கோபப்பட , இவர் விவரத்தை சொல்லியிருக்கிறார்.
அதற்கு அந்த மேனேஜர், " உங்கள் "செக்"கால் எங்களுக்கு அன்றைய அலுவல்கள் எதையும் செய்ய முடியாமல் கம்ப்புட்டார் க்ரேஷ் ஆகிவிட்டது . எங்கள் வாடிக்கையாளர்கள் நிறைய பேரின் செக் திருப்பியனுப்பும்படியாகி விட்டது. அதற்காக உங்கள் மேல் நாங்கள் நஷ்ட ஈடு வாங்க கோர்டுக்குப் போகலாம் ," என்று பொரிந்து தள்ளி விட்டார்.
இப்படியும் ஒரு தொல்லையா? முன்னே போனால் முட்டுகிறது, பின்னே வந்தால் உதைக்கிறது என்று நினைத்திருப்பாரோ நம் நண்பர்.
'கேஸ்' கம்பெனியும் ஒரு வாரத்திற்குப் பிறகு இவருடைய செக் திரும்பி விட்டது என்கிற காரணத்தைக் காட்டி , உடனே பணத்தைக் கட்டாவிட்டால் கோர்ட்டிற்கு இழுப்பதாக மிரட்டியது.
"நீங்களெல்லாம் என்ன என்னை கோர்டுக்கு இழுப்பது. நானே போகிறேன் " என்று நண்பர் சட்டத்தின் உதவியை நாடியிருக்கிறார். முதலில் இவருக்காக வாதாடுவதற்கே எந்த வக்கீலும் தயாராகயில்லை .('ஜீரோ டாலருக்கு' ஒரு கேசா ? என்கிற இளக்காரம் தான் ). பெரும் முயற்சிக்குப் பிறகே இவர் கோர்ட்டில் வக்கீல் வைத்து வாதாடி வெற்றி பெற்று, கேஸ் கம்பெனியிடமிருந்து நஷ்ட ஈடு பெறுவதற்கான கோர்ட் ஆர்டர் வாங்கியிருக்கிறார்.
கோர்ட் ஆர்டர் , கேஸ் கம்பெனிக்கு ,
1. அவர்களுடைய கம்ப்யுட்டரின் தானியங்கி பில் போடும் முறையை சீரமைக்கவும் ,
௨. நண்பருக்கு அவருடைய செக் திருப்பட்டதற்கான செலவையும்,
3.வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்திற்கான நஷ்ட ஈடும்,
4.நண்பரின் கோர்ட் செலவையும்,
5. நண்பரின் மன உளைச்சலுக்காக கணிசமான பணம் கொடுக்கும்படியாகவும்
அறிவுறுத்தப் பட்டிருந்தது.
இத்தனையும் "ஜீரோ" டாலருக்காகத் தான். அந்த ஜீரோ " கோல்டன் ஜீரோ " தானே!
இதைப் படித்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
"நமக்கு கேஸ் , சிலிண்டரில் தானே வருகிறது. நாம் பணமாகத்தானே சிலிண்டர் போடுபவரிடம் கொடுக்கிறோம்.அதனால் இந்தத் தகராறு எல்லாம் இங்கே வராது.இந்த மாதிரி நாம் கோர்டுக்கு செலவு செய்வோமா ?
நேரமும் , பணமும் இங்கே கொட்டியா கிடக்கிறது?
மேலும் இந்த ஜீரோவைக் கண்டு பிடித்ததே இந்தியர்களாகிய நாம் தானே .அதனால் இந்த ஜீரோ எல்லாம் நம்ம கிட்டே ஒன்றும் வாலாட்டாது.நம்மவர்கள் அவ்வளவு மோசமும் இல்லை. இப்படிப் பட்ட பில் எல்லாம் நமக்கு வராது . அப்படியே தவறுதலாக வந்தாலும் கோடிக்கணக்கில் தானே இருக்கும் ." என்று தானே நினைத்தீர்கள்.
நானும் அப்படித் தான் நினைத்துக் கொண்டு , லாப்டாப்பை மூடி விட்டு காபி போட, உள்ளே செல்ல எழுதேன்.
டிவி மேலிருந்த ,செல்போனிடமிருந்து செல்லமாய் ஒரு சின்ன சினுங்கல் .
பார்த்தால் எஸ்.எம்.எஸ். வங்கியிலிருந்து.
அலட்சியமாய் திறந்து பார்த்தால் ," உங்கள் க்ரெடிட் கார்டுக்கு நீங்கள் கட்ட வேண்டிய தொகை Rs.0.00. "அதோடு இதைக் கட்ட வேண்டிய கடைசி தேதியையும் குறிப்பிட்டிருந்தது.
வங்கியும் , செல்போனும் என்னைப் பார்த்து ,"இப்ப என்ன செய்வே ? இப்ப என்ன செய்வே? " என்று நக்கலடிக்கிறதோ !
images courtesy---google.
அன்று காலை எப்பொழுதும் போல் காலை டிபனிற்கு இட்லியும், கொத்தமல்லி சட்னியும் செய்து டேபிளில் வைக்கும் போது ,
" அடடா சட்னி தாளிக்கவில்லையே! " கவனித்தேன்.
கேஸில், இருப்புக் கரண்டி ,போட்டு விட்டு ,கடுகு பாட்டிலை அலமாரியிலிருந்து எடுக்க கையை உயர்த்த வலது முழங்கையில் ' பளிச் ' வலி.
கண்ணை மூடி வலியைப் பொறுத்துக் கொண்டேன்.
' எங்கேயாவது இடித்துக் கொண்டோமோ ' நினைத்துப் பார்த்ததில் ஒன்றும் புலப்படவில்லை.
அன்றைய பொழுது கழிந்தது. ஆனால் வலி அதிகமாகிக் கொண்டே போனது மட்டும் புரிந்தது. இரவு படுக்கும் முன் ஒரு வலி நிவாரணி மாத்திரை முழுங்கி விட்டுப் படுத்துக் கொண்டேன்.
காலை எழுந்ததும் ,பல் விளக்கும் போதே முழங்கை வலி,"நீ வலி நிவாரணி சாப்பிட்டால்.......நான் போய் விடுவேனா என்ன " என்பது போல் , அதிகமாயிருந்தது.
சரி, இனிமேல் சும்மா இருப்பது சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதற்கு சமம் ,என்பதை உணர்ந்து எங்கள் குடும்ப நல மருத்துவரை
அணுகினேன்.
இதில் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று ஒரு எலும்பு சிகிச்சை மருத்துவரிடம் என்னை அனுப்பினார்.
போனில் மாலை ஏழு மணிக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டு சென்றேன்.
டாணென்று ஆறேமுக்காலுக்கு அவருடைய கிளினிக்கிற்குப் போனால் மிகப் பெரிய கும்பல்.
இது என்னதிது? கிளினிக் தானே. இதென்ன இவ்வளவுக் கும்பல்.
சரி. நமக்கென்ன நாம் தான் அப்பாயின்ட்மென்ட் எல்லாம் வாங்கியிருக்கோமே! இவர்களெல்லாம் வாங்காமல் வந்திருப்பார்கள் என்று சவுடாலாக நினைத்துக் கொண்டு ரிசப்ஷனிஸ்ட் அருகே போய் நான் வந்திருப்பதை சொல்லி ஏழு மணிக்கு அப்பாயிண்ட்மென்ட் என்று சொன்னவுடன்.
ரிஷப்ஷனிஸ்ட் கடுகடுவென்று ." இவங்களைப் பாருங்கள் இவங்களுக்கு மாலை 3 மணி அப்பாயின்ட்மென்ட் . இன்னும் டாக்டரைப் பார்க்கவில்லை என்றதும் கொஞ்சம் மலைத்துப் போனேன்.
அந்தக் கும்பலில் நானும் ஐக்கியமானேன். நான் டாக்டரைப் பார்க்கும் போது மணி ஒன்பது.
நல்ல சிரித்த முகத்துடன், 'என்ன பிராப்ளம் " என்றார்.
நான் என் வலது முழங்கையில் வலியிருப்பதை சொன்னதும்.
அருகில் வைத்திருந்த ஸ்டீல் சுத்தி போல் இருந்த ஒன்றை எடுத்து மெதுவாக என் கை விரல்களைத் தட்ட ஆரம்பித்தார்.
" டாக்டர், எனக்கு முழங்கையில் தான் வலி " என்று சத்தமாக சொன்னதும் ,
தட்டுவதை நிறுத்தி விட்டு என்னைப் பார்த்தார்.
" நான் டாக்டரா இல்லை நீ டாக்டரா ? " என்பது போல் இருந்தது பார்வை.
முழங்கை வலி என்று வந்தால் இவர் விரலையும் உடைத்து விடுவார் போல் தெரிகிறதே என்று நினைத்தேன்.
எத்தனை மாணவிகளுக்கு இம்போசிஷன் கொடுத்தேனோ !
தெரியவில்லையே. அந்தப் பாவம் தான் டாக்டர் ரூபத்தில் வந்து பழி தீர்த்துக் கொள்கிறதோ என்று தோன்றியது
ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது. பத்திரமாக நம் கையையும் விரல்களையும் விடுவித்துக் கொண்டு சென்று விடுவோம்.என்று முடிவெடுத்தேன்.
எல்லா விரல்களையும் தட்டிப் பார்த்து சப்த ஸ்வரங்கள் கேட்கிறதா என்று பார்க்கிறாரோ என்று நினைத்தேன்.
(இதைத் தான்" இடுக்கண் வருங்கால் நகுக " "என்று வள்ளுவர் சொன்னாரோ!)
ஒருவழியாக சுத்தியலை கீழே வைத்து விட்டு மருந்து எழுத ஆரம்பித்தார்.
நான் டாக்டருக்குப் படிக்கவில்லை . ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் அதுக்காக என் கைவலியைப் பற்றி கொஞ்சமாவது என்னிடம் சொல்ல மாட்டேனேன்கிறாரே என்று யோசிக்கும் போது டாக்டர் திருவாய் மலர்ந்தார்.
"" உங்கள் வலி வந்து............. "
" ஆயர்பாடி மாளிகையில்........" செல்போன் இடை மறித்தது.
போனிற்கு முதலுரிமை., காதருகில் கொண்டு போய் . ஹலோ என்று சொல்லிக் கொண்டே ..என்னைப் பார்த்து " Denniss ........" என்று சொல்ல
Deniss என்பவர் பேசுகிறார் போலிருக்கிறது என்று நான் நினைக்கும் போதே.
போனை கைகளால் மூடிக் கொண்டே . என்னைப் பார்த்து அழுத்தந்திருத்தமாக இது " டென்னிஸ் எல்போ "என்று சொல்லி விட்டு போனில் பேசத்தொடங்க நான் குழம்பினேன்.
அது என்ன" டென்னிஸ் எல்போ ?"
டென்னிஸ் விளையாட சொல்கிறாரோ என்று தான் முதலில் நினைத்தேன்.
இந்த வயதிற்கு மேல் டென்னிஸ் ஆட முடியுமா? இது என்ன தொல்லை என்று நினைக்கும் போதே அவர் அவ்ருடைய லெட்டர் பேடில் எதையோ எழுதிக் கொடுத்து போனை விட்டுக் கொடுக்காமலே வேறு ஒரு அறையைக் காட்டி சைகையாலேயே போகச் சொன்னார்.
கொஞ்சம் என்னிடம் விளக்கமாக சொன்னால் தான் என்ன என்று ஒரு சின்ன கோபம் வந்தது டாக்டர் மேல்..
சரி. உரலுக்குள் தலையை விட்டாகி விட்டது. ரொம்பவும் இடிபடாமல் எடுத்துக் கொண்டு போய் விடுவோம் என்றெண்ணி அடுத்த அறைக்கு சென்றேன்.
அங்கே ஒரு இளம்பெண் வெள்ளைக் கோட் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார். என் பேப்பரை கையில் வாங்கிப் பார்த்து விட்டு ,
ஒரு கனத்தத் துப்பாக்கி வடிவில் ஒன்றை எடுத்து அதில் பேஸ்ட் போல் எதுவோ ஒன்றை அப்பி என் கையில் வைத்து சர் சர் என்று சுத்தி மசாஜ் செய்ய வலி கொஞ்சம் குறைந்தது.
மெதுவாக அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தேன்.
" இந்த வலி எனக்கு எதனால் வந்தது?"
" இதற்குப் பெயர் டென்னிஸ் எல்போ" .
"அப்படின்னா....... "இது நான்.
"டென்னிஸ் வீரர்களுக்கு வரும் வலி."
" டென்னிஸ் வீரரா... நானா..........."( நினைக்கும் போதே சிரிப்பு வந்தது)
"நான் ஒன்றும் டென்னிஸ் விளையாடுவதில்லையே ."
"டென்னிஸ் வீரர்களுக்கு மட்டுமல்ல, இப்பொழுது நிறைய பேருக்கு வருகிறது "என்று சொல்லி விட்டு தன வேலையைத் தொடர்ந்தார்.
நான் விடுவேனா?
"இது எதனால் வருகிறது? " மீண்டும் நான்.
நல்ல வேளை அந்தப் பெண்ணிற்கு கோபம் எதுவும் வரவில்லை.
முழங்கைக்கு அதிக பளு கொடுத்தாலும் வரும். " நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் " என்று அவள் கேட்க.
நான் என்ன செய்கிறேன்?
" எல்லோரும்செய்வது தான். வீட்டில் எல்லோருக்கும் சமைப்பது , காபி போடுவது........மிச்ச நேரத்தில் நெட் வலம் வருவது ."
"அதனால் கூட வந்திருக்கும்."
" எதனால் ...."ஆர்வமானேன்.
"உங்கள் கம்ப்யுட்டரை சரியான உயரத்தில் , கைக்கும் சௌகர்யமான இடத்தில் இல்லையானால் கூட வரும்" என்று அவர் சொல்ல புரிந்தது.
சமைக்கும் நேரம் தவிர, மற்ற நேரம் பூராவும் லேப்டாப்பும் கையுமாக அலைந்தால் இப்படித் தான் வலிக்கும் போலிருக்கிறது என்று தோன்றியது.
வீட்டிற்கு வந்து, இனிமேல் நம் வலை உலாவை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன்.
முடியுமா ?
சாப்பிடாமல் கூட இருந்து விடலாம்.
இன்டர்நெட் வலையில் மாட்டிக் கொண்ட நான் அதிலிருந்து விடுபடுவது மிகவும் கஷ்டமாச்சே !
ஆனந்த விகடனில் படித்தது நினைவில் மோதியது.
சென்ற மாதத்தில் ஒரு வாரம் ஜப்பானில் " நெட் ஃபாஸ்டிங் " என்று செய்திருக்கிறார்கள். அவர்கள் செய்தது இளம் தலைமுறையினர் இணையத்தை விட்டு வெளியே வந்து ,நண்பர்கள் உறவினர்கள் என்று பழக வேண்டும் என்பதற்காக.
நம்மால் முடியுமா? முடியாது என்றே தோன்றுகிறது.
நண்பர்களை சந்தித்து உரையாடுவதே வலையில் தானே.
அதெல்லாம் சரி. கைவலிக்கு என்னதான் தீர்வு என்கிறீர்களா? தினம் சிறிது நேரம் கணினியைத் தனிமையில் இனிமை காண விடுவது தான்.
என்னால் அப்படி விட முடியுமா?
முயன்று பார்க்க வேண்டும்.
image courtesy----google.