Saturday 18 April 2020

குலசேகராழ்வாரும், பொன் வட்டிலும்.








போன முறை கோவிலுக்கு சென்றிருந்த போது,

பணக்கார வீட்டுப் பெண்மணி, அம்மனுக்கு சாத்தினாற் போல் நகை போட்டுக் கொண்டு வந்திருந்தார். இவ்வளவு நகையையா போட்டுக் கொண்டு வருவார்?
கோவில் தானே இது? கல்யாண ரிசெப்ஷனா? சந்தேகம் வந்தது.

எல்லோரின் கண்களும் அவர் நகை மேலேயே இருக்க....
இவர் பத்திரமாய் வீடு போய் சேர வேண்டுமே  என்று எனக்குக் கவலையாய் இருந்தது.

அருகிலிருந்த என்னவர் என் மனதைப் படித்தவராய்," உன் ஹேண்ட் பேகைப் பத்திரமாய் பார்த்துக் கொள். மற்றவர்களுக்காக அப்புறம் கவலைப்  படலாம்" சொன்னதும்,

ஹேண்ட்பேகை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, சுற்று முற்றும் பார்த்துக் கொண்டேன்.

வேறென்ன செய்வது? எனக்கென்ன 4 தலைகளும், 8 கண்களுமா இருக்கு?

அப்படி இருக்கும் பிரம்மாவுக்கோ வேறு பிரச்சினை.

அவருக்கு என்ன?

அவர் திருப்பதிக்கு தரிசனம் செய்யப் போன போது, அலை மோதும் கூட்டத்தில் அவர் தலைகளினால் அவருக்குப் பெரும் வேதனையாம்.

அவர் திருப்பதி சென்று கூட்டத்தில் இடிபட்டதை நேரில் பார்த்தாயோ?

நான் சொல்லலைங்க...குலசேகராழ்வார் சொல்கிறார்.

அவர் கொக்கு, மீன் பிறப்பும் வேண்டாம் என்றாரா?  வேறென்ன பிறவி கேக்கலாம் என்று நினைத்துக் கொண்டே வேங்கடவன் சன்னிதிக்கே வந்து விட்டார். 

அவர் கண்ட காட்சியை அவராலேயே நம்ப முடியவில்லை.

வேங்கடவனை தரிசிக்க ஒரே தள்ளு முள்ளு .

(அதென்ன  புதுசா?)

ஆனால் தள்ளு முள்ளு செய்து கொண்டிருந்தது யார் தெரியுமா?

சாட்சாத் சிவன் , பிரம்மா, தேவேந்திரன் ,மற்றும் கோடானு கோடி தேவர்கள்.... எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு நின்றிருந்தார்களாம்.

சிவனுக்குக் கவலையே இல்லை.  பணமா, நகையா, நட்டா எதையும் அவர் பார்த்துக் கொள்ள வேண்டாமே. 
ஆனால் அவர் ஜடா முடி? கூட்டத்தில் சிக்கிக் கொள்ள, அதை சரி செய்ய பாடாய் பட்டுக் கொண்டிருக்க.. 

பிரம்மாவுக்கோ  வேறு தொல்லை..

ஒரு தலையை வைத்துக் கொண்டே , கூட்டத்தில் நாம் படாத பாடு படுகிறோம்.. பிரம்மாவின் நிலை எப்படியிருக்கும் ? நான்கு தலைகளும் இடிபட, பயங்கரத் தலைவலி.
(நான்கு க்ரோசினை முழுங்கி விட்டு) வேங்கடனின் தரிசனம் கிடைக்காதா என்று ஏங்கி நின்று கொண்டிருக்கிறார். 

இரு மூர்த்திகளோடு, தேவாதி தேவர்களும் முண்டியடிக்க...

"வழி விடுங்க...வழி விடுங்க..."  ஆனை  வர....எல்லோரும் திரும்பிப் பார்க்க...ஆழ்வாரும் பார்க்கிறார்.

வழி கேட்டவரைப் பார்த்ததும், சிவன், பிரம்மா உட்பட.... எல்லோரும் இரு பக்கமும் விலகி, வழி விட...

குலசேகராழ்வார் ,"சிவன், பிரம்மாவுமே வழி விடும் அளவிற்கு யாரந்த வி.ஐ.பி.? " ஆச்சர்யமாகப் பார்க்கிறார்.

கையில் ஒரு பொன் வட்டிலுடன் பிரமுகர் ஒருவர், கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு வேங்கடனின் அருகில் செல்கிறார்.

இவருக்கா இந்த ராஜ மரியாதை.?

இருக்காதா பின்னே! வேங்கடன் தாம்பூலம் தரித்த பின் உமிழும்,  உமிழ் நீரைத் தாங்கும் பொன் வட்டிலை ஏந்தும் பணியாளருக்குத் தான் இந்த ராஜ மரியாதை.

பார்த்த உடனே குலசேகராழ்வாருக்குக் குஷியாகி விடுகிறது. இந்தப் பணியாளைப் போல் நாமும் வேங்கடவனின் அருகே செல்ல முடிந்தால்... ?

ஆஹா...உடனே வேங்கடவனுக்கு ஒரு அப்ளிகேஷன் இ மெயிலில் தட்டி விடுகிறார்.
"அந்தரங்க கைங்கர்யம் வேங்கடவனுக்கு செய்யும் பாக்கியம் கிடைக்குமானால் .... " எனக்கு அந்தரங்கப் பணியாளர் பிறவி வேண்டும்" 
எப்படி என்று பாருங்களேன்..

பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்
துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே

திரித்து விட்ட சடையை உடையவனான  சிவனும், பிரமனும், தேவேந்திரனும், நெருக்கி உள்ளே புகுவதற்கு வழியில்லாத பூலோக வைகுண்டமாகிய திருமலையிலுள்ள திருக்கோயிலின் நீண்ட திருவாசலிலே  மின்னலை வளைத்தாற்போல சோதிமயமாய் விளங்குகின்ற வட்ட வடிவமான சக்ராயுதத்தையுடைய, திருவேங்கடமுடையான், வாய் நீருமிழ்கின்ற தங்க வட்டிலை கையிலேந்திக் கொண்டு, அந்தரங்க பணியாளர்களுடன் நானும், உள்ளே புகும், பாக்கியத்தைப் பெறக் கடவேன்.

அப்பாடி... ஆழ்வார் தனக்கு விருப்பமான பிறவியை தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டார் என்று வேங்கடவன் நினைத்து முடிப்பதற்குள்.... 

மனம் மாறி விட்டார் ஆழ்வார். அவசர அவசரமாக 
"வேங்கடவா! வேண்டாமப்பா வேண்டாம்."

"ஏனாம்?" 

"பொன் வட்டில் பணியாளர் பிறவி மிகவும் தற்காலிகமானது பெருமாளே. பொன் வட்டிலை யாராவது திருடி விட்டால்...?அப்புறம் நான் எப்படி உள்ளே வர முடியும். உனக்கு அருகே எப்படி நிற்க முடியும். அதனால் எனக்கு இந்தப் பிறவி வேண்டாம்."

"வேறு என்ன பிறவிக் கேக்கலாம்? யோசிக்க ஆரம்பித்து விட்டார். ஆழ்வார்.."

கொக்கு, மீன், அந்தரங்கப் பணியாளர் ஆகிய மூன்று பிறவியையும் veto செய்தாச்சு...

அடுத்து என்ன? பார்ப்போம்...

6 comments:

  1. இன்றைக்கு தான் இந்த தகவல் தெரியும்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துரை நான் தொடர்ந்து எழுத பெரிய பூஸ்ட் . உஙள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றீ தனபாலன் சார்.

      Delete
  2. அடுத்து என்ன கேட்டார் என்பதை உங்கள் பாணியில் படிக்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் படிக்கும் ஆவல் என்னை எழுதத் தூண்டுகிறது. நன்றி வென்கட்ஜி

      Delete
  3. அற்புதம்...ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்த்து...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி சார்.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்